பக்கம் எண் :

22

இனி,

        “பகைபாவ மச்சம் பழியென நான்கும்
         இகவாவா மில்லிறப்பான் கண்”  
          --குறள், 149

எனவும்,

        “நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
         பிறர்க்குரியா டோடோயா தார்”  
          --குறள், 149

எனவும், வரும் திருக்குறள்களையும் நினைக.

இனிக் கம்பநாடர், இராமன் கூற்றாக,

        “ஈர மாவது மிற்பிறப் பாவதும்
         வீர மாவதுங் கல்வியின் மெய்ந்நெறி
         வார மாவது மற்றொரு வன்புணர்
         தார மாவதைத் தாங்குந் தருக்கதோ?”

என ஒதுதலுமுணர்க.

     இனி, பிறர்மனை நயத்தற்கண் அறம்பொருளே யன்றி அவர் விரும்பும்
இன்பந்தானும் இல்லையே! அஃதொரு நோயேயாம் எனக் குமரகுருபர
வடிகளார்,

        “பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
         அறனன்றே ஆயினு மாக-சிறுவரையும்
         நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே
         மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய்”

எனக் கூறுகின்ற மெய்ம்மொழியும் உளங்கொள்க.              (15)


16.           இதுவுமது

பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும்
  வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாள்
செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்.

     (இ - ள்.) பொய்யன்மின் - பொய்கூறாதீர்கள்; புறங்கூறன் மின் -
புறங்கூறாதீ்ர்கள்; யாரையும் வையன்மின் - எத்தகையோரையும் இகழ்ந்து
கூறாதீர்கள்; வடிவு அல்லன சொல்லி நீர்உய்யன் மின் -
அழகல்லாதனவற்றைக் கூறுமாற்றாலே உடலோம்பாதீர்கள்; உயிர்கொன்று
உண்டு வாழும் நாள் செய்யன்மின் - பிறவற்றின் உயிரைக் கொன்று
அவற்றின் ஊனையுண்டு நுங்கள் வாழ்நாளை ஆக்கிக்கொள்ளாதீர்கள்;
சிறியாரொடு - கயமாக்களோடு; தீயன்மின் - கேண்மை கொள்ளாதீ்ர்கள்
என்பதாம்.


     (வி - ம்.)
பொய் குறளை கடுஞ்சொல், இழிதகவுடைய சொற்கள்
இவற்றைச் சொல்லாதீர். வடிவு - அழகு. சொல்லிற்கழகு - வாய்மை