பக்கம் எண் :

26

     துற்று - சோறு. உளவாக - மிகுதியாக. விரல்: ஆகுபெயர், கை. ஒரு
துறவி தன் பலிக்கலத்தில் நிரம்பச் சோறு ஏற்றுவருவானைக் கண்ட ஒருவன்
நீ இங்ஙனம் மிகவும் சோறு தொகுத்து வருவதற்குக் காரணம் என்னை? என
வினவினனாக, அதற்குக் காரணங் கூறுபவன் தானங்களுள் வைத்து உண்டி
கொடுத்தலே நனியுயர்ந்தது ஆகலின் யானும் காணார் கேளார்
கான்முடப்பட்டோர் முதலியவர்க்குத் தானம் வழங்கவே இவ்வாறு ஏற்று
வருகின்றேன் காண் ! என விடை கூறினன் என்க. (இஃது ஊகமாத்திரமே)

     அற்றம் குற்றம். தானப் பொருள்களுள் உண்டியே தலை
சிறந்ததென்பதனை,

        “ஆற்றுநர்க் களிப்போ ரறவிலை பகர்வோர்
         ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்
         மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
         மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
         உண்டி கொடுத்தோர் உயிர்க்கொடுத் தோரே”

                                    (மணி - 11 - 92 - 96)

என்பதனானும், துறவிகள் சோறு மிகவுமிரந்து ஏனையோர்க்கு வழங்கும்
வழக்கமுடையர் என்பதனை,
    
        “ஐயக் கடிஞை கையி னேந்தி
         மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக்
         காணார் கேளார் கான்முடப் பட்டோர்
         பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர்
         யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி
         யுண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக்
         கண்படை கொள்ளுங் காவலன் றானென்”


எனவரும் ஆபுத்திரன் வரலாற்றானுமுணர்க.               (18)


19.        அருளுடைமை

ஆற்று மின்னரு ளாருயிர் மாட்டெலாந்
  தூற்று மின்னறத் தோநனி துன்னன்மின்
மாற்று மின்கழி மாயமு மானமும்
போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர்.

     (இ - ள்.) நீர் ஆர் உயிர் மாட்டெலாம் அருள் ஆற்றுமின் - நீயிர்
அரிய உயிரினங்களிடத்தெல்லாம் அருள் செய்வீராக! அறம் தூற்றுமின் -
நல்லறங்களை நாடோறும் மாந்தர்க்குத் கூறுவீராக!; தோம் நனி துன்னன்மின்
- தீவினைகளைப் பொருந்தாது மிகவும் ஒழிவீராக!; மாயமும் கழி மானமும்
போற்றுமின் - வஞ்சனையையும்