பக்கம் எண் :

27

மிகையாய மானத்தையும் விலக்குவீராக!: இவை பொருளாக் கொண்டு
போற்றுமின் - இவ்வறங்களை உறுதிப் பொருளாகக் கருதிப் பேணி
வாழ்வீராக!; என்பதாம்.


     (வி - ம்.) எவ்வுயி்ர்க்கும் அருள் செய்க! அறங்களையே யாவர்க்கும்
அறிவுறுத்துக! தீவினையை அஞ்சுக ! வஞ்சகத்தையும் மாண்பிறந்த
மானத்தையும் விலக்குக. இவ்வறங்களையே
பொருளாகப் பேணி நல்வாழ்வு
வாழ்வீராக ! என்றவாறு.


     (வி - ம்.) அருள் - தொடர்பு பற்றாது இயல்பாக
எல்லாவுயிர்கண்மேலும் செல்வதாகிய இரக்கம்.

        “அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
         பூரியார் கண்ணு முள”   
                --குறள், 241

எனவும்,

        “நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
         றேரினு மஃதே துணை”  
                --குறள், 242

எனவும்,

        “அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
         வின்னா வுலகம் புகல்”    
              --குறள், 243

எனவும்,
  
       “ மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
         தன்னுயி ரஞ்சும் வினை”    
             --குறள், 244

எனவும்,

       “அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
        மல்லன்மா ஞாலங் கரி”
                  --குறள், 245

எனவும்,

       “அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
        கிவ்வுலக மில்லாகி யாங்கு”
               --குறள், 246

எனவும் வருகின்ற திருக்குறள்களான் அருளறத்தின் மாண்புணர்க.

     தூற்றுமின் என்றது, யாண்டும் யாவர்க்கும் அறிவுறுத்துமின்
என்பதுபட நின்றது. தோம் - குற்றம் ; தீவினை.

     இனி, தீவினையை நயந்து செய்யற்க வென்பார்
நனிதுன்னன்மின்-தீவினை தீயவே பயத்தலான் அதனைத்
துன்னாமையே உயிர்க்குறுதியாயிற்று என்றார்.

இதனை,

       “அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
        தீவினை செய்யா னெனின்”
               --குறள், 210

என்பதனானும், உணர்க.