பக்கம் எண் :

37

தன்பால் கேண்மையில்லாமலும் தன்னைச் சிறிதும் விரும்பாமலுமிருப்பவரையும்
பெரிதும் விரும்பி அவ்விருப்பத்தை விடாது நிற்கும் ; நனி காமுறுவாரை -
தன் உந்துதலாலே மிகவும் இணை விழைச்சினை விரும்புவாரை ; வீழ்க்கும் -
தீவினைக்கண் வீழ்த்தி விடும் ; ஆதலால், கண் இன்று - அக்காமத்திற்குக்
கண்ணில்லை என்பர் உலகோர் என்பதாம்.


     (வி - ம்.) எண் - ஆராய்ச்சி. எண்இன்றியே துணியும் என்றது
இதனைச் செய்தால் அதன் விளைவு இன்னதாகும் என்று ஆராய்ச்சியின்றியாது
நிகழினும் நிகழுக வென்று காரியஞ் செய்யத் துணியும் என்பதாம்.

     காமத்தின் பண்பு இன்னதாதலை இராமாயண முதலிய காப்பியங்களிற்
காண்க. உலகியலினும் யாண்டுங் காணலாம். எவ்வழியானும் ஓடும் என்றது
முறை நோக்காமல் யாவரிடத்தும் செல்லும் என்றவாறு. காமம் இத்தகைய
இழிகுணமுடைத்தென்பது கருதியன்றோ, ஆசிரியர் குமரகுருபர அடிகளார்,

        “கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார்
         களவொன்றோ ஏனையவுஞ் செய்வார்-பழியொடு
         பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
         காமங் கதுவப்பட் டார்”
        --நீதிநெறி விளக்கம், 79

என்றோதுவாராயினர்.

     இனி, காமங்கதுவப்பட்ட நெஞ்சம் அறிஞர் அறவுரை கொள்ளாமல்
எவ்வழியானும் ஓடும் என்பதனை,

        “ ............ நன்னுதன் மடந்தையர்
         மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
         இடங்கழி நெஞ்சத் திளமை யானை
         கல்விப் பாகன் கையகப் படாஅ
         தொல்கா வுள்ளத் தோடும்”
    சிலப், --23 : 35-9

எனவரும் இளங்கோவடிகளார் இன் மொழியானுமுணர்க.

     நண்-நண்ணுதல்-அஃதாவது நெருங்கி நட்புக்கொள்ளுதல். தம்மை
விரும்பாதவரையும் நயந்து நிற்கும் என்பதனை, கைக்கிளை ஒழுக்கத்தான்
உணர்க. அஃதாவது :--

        “காமஞ் சாலா விளமை யோள்வயி
         னேமஞ் சாலா விடும்பை யெய்தி
         நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற்
         றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச்
         சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல்
         புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே”