பக்கம் எண் :

48

     இனி, கொல்லாமை என்னும் அறமே அறங்களிலெல்லாம் தலைசிறந்த
தென்பதனையும் அவ்வறமே இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும்
வீடுபேற்றினையும் ஒரு சேரத் தரவல்லதென்பதனையும், திருக்குறளின்
கொல்லாமை என்னும் அதிகாலத்திற்கு ஆசிரியர் பரிமேலழகர்.

     “இது (கொல்லாமை) மேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினுஞ்
சிறப்புடைத்தாய்க் கூறாத வறங்களையும் அகப்படுத்து நிற்றலின் இறுதிக் கண்
வைக்கப்பட்டது” என்று கூறும் முன்னுரையாம் பொன்னுரையானும்;
தெய்வப்புலமைத் திருவள்ளுவனார்

      “அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
       பிறவினை எல்லாந் தரும்”          
    --குறள், 321

எனவும்,

      “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
       பின்சாரப் பொய்யாமை நன்று”  
          --குறள், 323

எனவும்,

      “நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
       கொல்லாமை சூழு நெறி”     
           --குறள், 324

எனவும், ஓதுந் திருக்குறள்களானு முணர்க.

     இனி, கொல்லாமை என்னுமிவ்வறம் வீடுபேறும் நல்கும்
என்பதனை, அப்பொய்யில் புலவர்,

      “கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
       செல்லா துயிருண்ணுங் கூற்று”   
         --குறள், 329

என வோதுந் திருக்குறளானும், அதற்கு ஆசிரியர் பரிமேலழகர்:--

     “மிகப் பெரிய அறஞ்செய்தாரும் மிகப் பெரிய பாவஞ் செய்தாரும்
முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பரென்னும்
அறநூற் றுணிபு பற்றி, இப் பேரறஞ் செய்தான்றானும், கொல்லப்படான்;
படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்துமென்பார்,
‘வாழ் நாள்மேற் கூற்றுச் செல்லா தென்றார்;’ செல்லாதாகவே கால
நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர்வீடுபெறுமென்பது. இதனான்
அவர்க்கு வருநன்மை கூறப்பட்டது’ என வகுக்கும் நல்லுரையானும் நன்கு
தெளிக.

     கதி - பிறப்பு. துயர் அஞ்சி என்றது துயர் அஞ்சி வீடுபேறு எய்தி
நிலைகொள்ளநினையின் என்பதுபட நின்றது. இம்மைப் பயன் கூறினமையின்
மறுமையிற் றுறக்கம் புகுதலும் கொள்க.                                                   (34)


35.

       செல்வ நிலையாமை

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்

  கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவ
ரெள்ளும் பெருந்துயர்நோ யெவ்வ மிகப்பவோ.