பக்கம் எண் :

51

        “நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
         புல்லறி வாண்மை கடை”
            --குறள், 991

எனவும்,

        “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
         போக்கு மதுவிளிந் தற்று”   
         --குறள், 992

எனவும் அறிவுறுத்தலுணர்க.                           34


37.          இதுவுமது

இன்மை யிளிவா முடைமை யுயிர்க்கச்சம்
  மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை யுறுக்கும் புரையில் பொருளைத்
துன்னா தொழிந்தார் துறவோ விழுமிதே.

     (இ - ள்) இன்மை இளிவாம்-ஒருவனுக்கும் பொருளின்மையாகிய
நல்குரவு தானும் பெரிதும் இழிவைத் தருவதாம் ; உடைமை-மற்றும்
அப்பொருட்பேறுதானும் ; உயிர்க்கு அச்சம் - அவனுயிர்க்கே பெரிதும்
அச்சத்தைத் தருவதாகும் : மன்னல் சிறிது ஆய் - மேலும் அப்பொருள்
ஒருவன்பால் நிலைப்பெற்றிருக்கும் பொழுதுதானும் மிகவுஞ் சிறியதாகி் ;
மயக்கம் பெரிதாகி - அஃதில்லையாயினும் உண்டாயினும் இரண்டு
பொழுதினும் மயக்கம் மிகவுஞ்செய்வதாகி ; புன்மையுறுக்கும் - மாந்தர்க்குக்
கீழ்மையேயுண்டாக்கு மியல்புடைய ; புரை இல் பொருளை மேன்மையில்லாத
பொருள்களை ; துன்னாது பற்றுதலின்றி, ஒழி்ந்தார் - அம்மயக்கொழிந்த
சான்றோரது; துறவு விழுமிது ; துற வொழுக்கமானது மிகவும் சிறப்புடையதாம்,
என்பதாம்.

     (வி - ம்) பொருளில்லாவிட்டாலும் இழிவுதரும். அதனைப்
பெற்றபொழுதோ உயி்ர்க்கே அச்சந்தருவதாம் பெற்றுழியும் அது
நிலைத்திருத்தலுமில்லை. அதனை பெற்றபொழுதும் மாந்தர்க்கு மயக்கமே
மிகும். இழந்தபொழுதும் மயக்கமே செய்யும். இங்கனம் எவ்வாற்றானும்
மாந்தர்க்குக் கீழ்மையே தருகின்ற பொய்ப்பொருளைப் பற்றாமல்
மயக்கொழிந்த சான்றோருடைய துறவொழுக்கமே உலகின்கண் மிகவும்
சிறப்புடைய செயலாம் என்றவாறு.

     இன்மை - நல்குரவு. இளிவரவு - இழிவு - உடைமை பொருட்பேறு -
கள்வர் அரசர் முதலியோரால் கொலையுண்ணவும் நலிவுறவும் செய்யுமாகலின்,
உடைமையுயிர்க்கச்சம் என்றார். மன்னல் - நிலைபெறுதல் பொருள்
சகடக்கால் போன்று மாறி வருதலால் நிலைபேறு சிறிதாய் என்றார். புன்மை -
காம வெகுளி மயக்கங்கட்கு ஏதுவாம் கீழ்மை, புரை - உயர்வு.

     இனி, இன்மை இளிவாம் என்பதனை,