பக்கம் எண் :

54

       “இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
        னின்மையே யின்னா தது”  
           --குறள், 1042

எனவும்

       “இன்மை யெனவொரு பாவி மறுமையு
        மிம்மையு மின்றி வரும்”   
           --குறள், 1042

எனவும் வரும் திருக்குறள்களானும் உணர்க.

     ஈதல் முதலிய நல்லறம் பல செய்தார்க்கன்றித் துறக்கவுலக வாழ்வு
கிடையாதாகலின் இன்மை மறுமை வாழ்க்கையையும் கெடுக்கும் என்பது
கருத்து.                                               (39)


40.        இளமை நிலையாமை

வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக்
  கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா
நாற்ப திகந்தா நரைத்தூதும் வந்ததினி
நீத்த றுணிவா நிலையா திளமையே.

     (இ - ள்.) வேல்கண் மடவார் விழைவு ஒழிய - நெஞ்சமே!
வேல்போலும் கண்களையும் மடப்பத்தையும் உடைய மகளிர் நம்மை
விரும்பாது புறக்கணிப்பவும்; யாம் விழைய - யாம்மட்டும் அம்மகளிரை
விரும்பவும்; கோல்கண் நெறிகாட்ட - கோலாகிய கண்ணே இனி நமக்கு
வழிகாட்டும் கருவியாகவும்; கொல் கூற்று உழையது ஆம்-கொல்கின்ற
கூற்றுவனிடத்திற்கு அணுகியதாகிய; நாற்பது இகந்தாம் - நாற்பதியாட்டை
யகவையினையும் கடந்தொழிந்தோம்; நரைத்தூதும் வந்தது - சாக்காட்டினை
யறிவிக்கின்ற மறலியின் தூதாகிய நரையும் வந்துற்றது; இளமை நிலையாது -
இளமைநிலைத் திராதென்று முணர்ந்து கொண்டோமன்றோ? இனி நீத்தல்
துணிவாம்-இனியேனும் துறந்துபோதலைத் துணிவோமாக! என்பதாம்.

     (வி - ம்.) இது மெய்யுணர்வுடையோனொருவன் தன்னெஞ்சிற்குக்
கூறியது. வேற்கண் மடவார் நம்மை விழையாராகவும் யாம் மட்டும் அவரை
விழைதல் நாணுத் தகவுடைத் தென்பான், மடவார் விழைவு ஒழிய யாம்
விழைய நாற்பது இகந்தாம் என்றான். கட்பொறி ஒளி யிழந்து போயின
வென்பான் கோற்கண் நெறிகாட்ட என்றான். நாற்பது
நாற்பதியாட்டை
யகவை. நரைசாவினை முற்பட வுணர்த்துமொரு அறிகுறியாகலின், அதனை
மறலியின் தூதுவனாக உருவகித்தான். யாம் சாவினை மிகவும்
நெருங்கிவந்துவிட்டோம் என்றிரங்குவான். கொல்கூற்றுழையதாம் நாற்பது
என்றான். நீத்தல் - துறந்துபோதல். இனி இதனோடு,

        “மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப
             மல்லிகைமேன் மாலை சூடிக்
         கைதிரண்ட வேலேந்திக் காமன்போற்
             காரிகையார் மருளச் சென்றார