பக்கம் எண் :

80

        மாண்பில ளாயின் மணமக னல்லறம்
        பூண்ட புலப்படா போல்”  
       --நீதிநெறிவிளக்கம், 10

எனவரும் குமரகுருபரவடிகளார் பொன்மொழியானும்,

       “நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
        சொற்பொருள் சோர்வு படும்”
            --குறள், 1046

எனவரும் திருக்குறளானுமுணர்க.                          (66)


67.          இதுவுமது

தொழுமக னாயினுந் துற்றுடை யானைப்
  பழுமரஞ் சூழ்ந்து பறவையிற் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற்
பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப.

     (இ - ள்.) தொழுமகன் ஆயினும் - பிறரைத் தொழுது பிழைக்கும்
கீழ்மகனேயாயினும்; துற்று உடையானை - பொருளுடையானை; பழுமரம்
சூழ்ந்த பறவையில் சூழ்ப் - உலகமாந்தர் பழுத்த மரத்தைச் சூழ்கின்ற
பறவைக் கூட்டம் போன்று வந்து சூழ்ந்து கொள்வர்; விழுமியரேனும் - மற்று
அறிவு குணஞ் செயல்களாலே சிறப்புடைய மேன்மக்களாயினும்; வெறுக்கை
உலந்தால்-செல்வம் அழிந்து நல்குரவுடையராய பொழுது; வீழ்ந்த பழுமரம்
பறவையின் போப - (உலக மாந்தர்) விழுந்துபோன பழுமரத்தை விட்டுப்
போகின்ற பறவைக் கூட்டம் போன்று அகன்றுபோகா நிற்பர் என்பதாம்.

     (வி - ம்.) வீழ்ந்த பழுமரம் என மாறுக.

     உலகமாந்தர் கீழ்மகனாயினும் பொருளுடையானைச் சூழ்ந்து கொள்வர்.
மேன் மக்களாயினும் வறியராயின் அணுகாது விலகிப் போவர் என்றவாறு.
துற்று: ஆகுபெயர்.

இதனை,

     “இவறன்மை கண்டு முடையாரை யாரும்
      குறையிரந்துங் குற்றேவல் செய்ப-பெரிதுந்தாம்
      முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
      கற்பன்றே கல்லாமை யன்று.”

எனவரும் (நீதி நெறி விளக்கம் - 12) குமரகுருபரர் மொழியானும்,

     “ஆகா தெனினு மகத்துநெய் யுண்டாகின்
      போகா தெறும்பு புறஞ்சுற்றும்-யாதுங்