பக்கம் எண் :

9

        “அநித்தம் துக்கம் அநான்மா அசுகியெனத்
        தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்”
                                    --மணி, 20 : 254 - 55

என்பதும்து.                                            (5)

         இதுவுமது

6.

அனலென நினைப்பிற் பொத்தி
    யகந்தலைக் கொண்ட காமக்
கனலினை யுவர்ப்பு நீராற்
    கடையற வவித்து மென்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னா
    னீக்குது மென்று நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர்
    போகாமை வைப்பார்.

     (இ - ள்) அனல் என நினைப்பிற் பொத்தி - நொய்யவிறகினில்
தீக்கதுவுமாறுபோல நினை வின்கண் கதுவிக்கொண்டு; அகந்தலைக்
கொண்ட காமக் கனலினை - நெஞ்சத்தை யிடமாகக் கொண்டு வளருகின்ற
காமமாகிய பெரு நெருப்பை; உவர்ப்பு என்னும் நீரால் - வெறுப்பு என்னும்
நீர் பெய்து; கடையற அவித்தும் என்னார் - எச்சமின்றி அவித்துவிடுவேம்
என்று கருதாராய்; நினைவிலாப் புணர்ச்சிதன்னால் நீக்குதும் என்று
நிற்பார் - நினைவிழந்து அதுவேயாகி அழுந்துதற்குக் காரணமான
புணர்ச்சியினாலேயே அக்காமத்தை அகற்றுவேம் என்று முனைந்து
நிற்கின்றனர் மடவோர் ; புனலினைப் புனலினாலே யாவர் போகாமை
வைப்பார் - மிக்குப் பெருகுகின்ற வெள்ளத்தை மற்றுமொரு வெள்ளத்தாலே
அணையிட்டுத் தடுத்துவைக்கும் ஆற்றலுடையோர் யாவரே உளர் என்பதாம்.

     (வி - ம்.) பொத்துதல் - மூடிக்கோடல். அகம் - நெஞ்சு.
உவர்ப்பு நீர்: பண்புத்தொகை. உவர்ப்பு - வெறுப்பு.

     காமத்தீ மெய்யுணர்வால் அவிவதன்றி நுகர்ச்சியால் அவியாது
என்பதனையும், காமத்தாற் கதுவப்பட்டார் அதனிடத்தே அழுந்தி
உலகினையே மறப்பர் என்பதனையும்,

      “சிற்றிடைச் சீதையென்று நாமமுஞ் சிந்தை தானும்
       உற்றிரண் டொன்றா நின்றா லொன்றொழித் தொன்றை யுன்ன
       மற்றொரு மனமு முண்டோ மறக்கலாம் வழிமற் றியாதோ
       கற்றவர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்க லாமோ”

எனவரும் கம்பநாடர் மொழியானும் உணர்க.                    (6)