பக்கம் எண் :

102பால காண்டம்  

150.

விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ;
குலக் கொடி மதர் வாய் குமுதம் நாறுவ;
கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ;
மலர்க் கடி நாறுவ. மகளிர் கூந்தலே.
 

விலக்க அருங்கரி மதம்- விலக்குவதற்கு அரிய யானைகளின் மத
நீர்; வேங்கை  நாறுவ-  வேங்கை  மலர்களைப்  போல மணக்கிறது;
குலக்கொடி  மாதர்வாய் குமுதம்  நாறுவ -  உயர்குடியில்  பிறந்த
கொடியை   ஒத்த   மகளிரின்   வாய்கள்   குமுத   மலர்   போல்
விளங்குகின்றன;  கலக்கடை  களிப்ப  அரும் கதிர்கள்  நாறுவ -
அம்மகளிரின்  அணிகலன்களில்  அளவிடற்கு அரிய ஒளிக் கதிர்கள்
எங்கும்  ஒளிர்கின்றன;  மகளிர் கூந்தல் மலர்க்கடி நாறுவ- அந்த
மகளிரின் கூந்தல் மலர் மணம் கமழ்கிறது.

யானைகளின் மத நீர் வேங்கை மலர் மணம் வீசுகிறது. உயர் குலப்
பெண்களின் வாய் குமுத மலர்களைப் போல் விளங்குகிறது. அவர்கள்
அணிந்துள்ள    அணிகலன்களின்   ஒளி   எங்கும்   ஒளிர்கின்றன.
அம்மகளிரின்  கூந்தல்  மலர்  மணம்  கமழ்கிறது என்றார். வேங்கை
மலர்ந்திருக்கும்  போது.  புலி  போலத்  தோன்றும்.  அதனைப் புலி
என்று  கருதி  யானை  அம்மரத்தைத்  தாக்கும்  அதனால் மலர்கள்
யானைமீது  சிந்த. அம்மலர் மணம் படிந்து - மத நீரை அந்த மணம்
உடையதாகச் செய்யும் என்பர்.                              58
 

151.கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி. இந் நகர்
ஆவணம் கண்டபின். அளகை தோற்றதே!

 

கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத - சிறந்த நகரங்களின்
வரிசையிலே  அயோத்தி  நகருடன்  சேர்ந்து  எண்ணப்படாத;  அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
-அந்தத் தேவர் நகரமான
அமராவதியை இந்த நகருக்கு இணையோ. அல்லவோ என்று எடுத்துச்
சொல்வது   எதற்கு?; யாவையும் வழங்கு இடத்து  இகலி - எல்லா
வளங்களையும் தரும் விதத்திலே வேறுபட்டு விளங்குவதோடு; இந்நகர்
ஆவணம் கண்டபின்
-  இந்த  நகரத்துக் கடைத் தெருவைப் பார்த்த
பிறகு;  அளகை  நோற்றது - செல்வம் மிக்கதென்னும் அளகாபுரியே
தோல்வியுற்றது.

அயோத்தி     நகரின் கடைத் தெருவைப் பார்த்து. அளகாபுரியே
தோற்றது   என்னும்   போது.   சிறந்த   நகரங்களின்  வரிசையிலே
கூறப்படாததான  அமராவதியை அயோத்திக்கு ஒப்போ? அல்லவோ?
என்று  வினாவுவது  எதற்காக? கோவை:  வரிசை.  நிரல். அமராவதி
குறிப்பிடப்படவில்லை என்பதால் “எண் குறிக்கலா” என்றார்.     59