பக்கம் எண் :

124பால காண்டம்  

சுடுதொழில்     அரக்கரால்  -  சுடுகின்ற  தொழிலை  உடைய
அரக்கர்களால்;  வான்  உளோர்  தொலைந்து-  வானுலகில் வாழும்
தேவர்கள்     வாழ்வறிந்து;    சுடு    அமர்களன்    அடிகலந்து
கூறலும்
-நஞ்சுதங்கிய  மிடற்றை  உடைய சிவபெருமானது பாதங்களை
அடைந்து  தமது  துன்பத்தைக்  கூறலும்; படு  பொருள்  உணர்ந்து
அப்பரமன்
- மேலே நிகழவேண்டியவைகளை  முன்னரே உணர்ந்துள்ள
அப்பெருங்கடவுளான    சிவபெருமான்;    இனியான்   அடுகிலேன்
எனமறுத்து
-  இனி  யான்  அரக்கருடன்  போர்புரிய மாட்டேன் என
மறுத்து   உரைத்து;   அவரொடும்  ஏகினான்-  அவ்வமரர்களுடன்.
நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.

நினைக்கும்   மனத்தையும் சுடக்கூடிய அத்துணைக் கொடுந்தொழில்
என்பார்   ‘சுடு  தொழில்’  என்றார்.  சுடு:  நஞ்சு.   களன்:  கழுத்து.
பிறர்க்குத்  துன்பம் விளைவிக்கும் நஞ்சைத் தானுண்டு.   தேவர்களைக்
காத்தார்   என்பதைக்   குறிப்பிடுவதிது.  படுபொருள்:    மேல்நிகழும்
நிகழ்ச்சி.  சிவபெருமானைப்  பரமன்  (பெருங்கடவுள்)   எனக்  கூறும்
கம்பரது   சமய   சமரசக்   கொள்கை   அறிந்து    மகிழ்தற்குரியது.
‘படுபொருள்’  என்றது  ‘அரக்கர்  இனி இன்னாரால்  அழிபடுவார்கள்’
என்ற அவ் உண்மையை  அறிந்தமையால் தான் அடுகிலேன் என்றான்.
என்றார்.                                                  7
   

187.வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.

 

வடவரைக்    குடுமியின்  நடுவண் - மேருமலையின்  சிகரத்தின்
மத்தியிலே;   மாசு  அறு சுடர்மணிமண்டபம்  துன்னி -  குற்றமற்ற
ஒளிமிகுந்த  மணிகளாலமைந்த  மண்டபத்தை  அடைந்து;  நான்முகக்
கடவுளை    அடிதொழுது
-   (அங்கு   வந்து  சேர்ந்த)   பிரமனை
அடிவணங்கி;    அமரகண்டகர்-   தேவர்களுக்குப்   பகைவர்களான
அரக்கரது;   இடிநிகர்  வினையம்  அது-  இடிபோன்ற அக்கொடும்
செயல்களை; இயம்பினான்- சொல்லலானான்.

வடவரை:  மேருமலை. தேவர்கள் தன்னைக் காணவருவதை அறிந்த
நான்முகன்   மேருமலைச்   சிகரத்தில் -   மணிமண்டபத்தில்   வந்து
தங்கியிருந்தான். தேவர்கள் உடன்வர. சிவபெருமான்  அங்குச்  சென்று
அரக்கர்தம் கொடுஞ்செயலைக். கூறினார் என்பது கருத்து.

மாசறு     சுடர் மணிமண்டபம்:  தேவர்கள்  கூடி  ஆலோசிக்கும்
மண்டபம்.  கண்டமுகம்:  முள்  அரக்கர்கள்  முள்  போன்று  துன்பம்
விளைவிப்பவர் என்பதால் ‘கண்டகர்’ என்றார்.

வினை: செயல். ‘அம்’  சாரியை  பெற்று  ‘வினையம்’  என வந்தது
வரை: இருமடி யாகு பெயராய் மலையைக் குறித்தது. அரோ: அசை.  8