உரை செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி - இவ்வாறு விசுவாமித்திரன் தன்னைப் புகழ்ந்து பேசியபோது. தயரதன் அம்முனிவரது முகத்தைப் பார்த்து; உள்ளத்துள் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு - தனது உள்ளத்திலே எவராலும் அளத்தற்கு இயலாததாகிய ஒரு; பேர் உவகைக் கடல் பெருக - பெரிய மகிழ்ச்சி என்னும் கடல் பெருகவும்; கரங்கள் கூப்பி - தனது இரு கைகளையும் குவித்து (முனிவனை வணங்கி); அரசு எய்தி இருந்த பலன் எய்தினன் - எனது ஆட்சியை அடைந்ததன் பயனை இன்று நான் அடைந்தேன்; மற்று. இனிச் செய்வது அருளுக என்று - இனி நான் என்ன செய்யவேண்டும் என்பதை அருள்வீராக என்று; முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய - முரசுகள் முழங்கும் வாயிலை உடைய தயரதன் முன்னர் எடுத்தியம்ப; ஆங்கே பின்மொழியும் முனிவன் - அப்போதே விசுவாமித்திர முனிவன்பின் கூறுவானாயினான். உரை செய்தல்: பேசுதல். ‘அளவு’ இங்குப் பொழுது குறித்தது. உவகை: களிப்பு. கூப்பி: குவித்து. அரசு. முரசு என்பன எதுகை நோக்கி அரைசு முரைசு என நின்றன. எய்தி: அடைந்து. எய்து: பகுதி. மற்று: வினைமாற்றுப் பொருளில் வந்தது. அருளுக: வியங்கோள் கடைத்தலை: தலைக்கடை என்பது மொழிமாறி நின்றது. முன்னே மன்னன் மொழியப் பின்னே முனிவன் மொழிந்தான் என்பது கருத்து. ‘உவகைக் கடல்’ என்பதற்கேற்ப. கரை செய்ய அரியது என்றார். ‘முன்மொழியப் பின் மொழியும்’ என்பது முரண்தொடை. 10 |