கறுத்த மாமுனி - சீற்றம் கொண்டெழுந்த விசுவாமித்திர முனிவனது; கருத்தை உன்னி - உள்ளக் கருத்தை நினைத்துத் தேர்ந்து (அவனை நோக்கி); நீ பொறுத்தி என்று அவன்புகன்று - நீ பொறத்தருள்வாயாக என அவனுக்குச் சொல்லிவிட்டு (பிறகு மன்னனைப் பார்த்து); நின் மகற்கு - உனது மகனாகிய ராமபிரானுக்கு; உறுத்தல் ஆகலா உறுதி - அடைவித்தற்கு அரிய நன்மைகளெல்லாம்; எய்தும் நாள் மறுத்தியோ - வந்து கூடும் நாளை வேண்டாமென மறுத்துக் கூறுவாயோ; எனா வசிட்டன் கூறினான் - என்று வசிட்ட முனிவன் கூறலானான். கறுத்தல்: சினத்தல். உன்னி: நினைத்து. பொறுத்தி: பொறுப்பாயாக. மரியாதை உணர்த்திற்று. உறுத்தல். அடையச் செய்தல் (பிறவினை) உறுதி: நன்மை. மறுத்தியோ: மறுத்துரைப்பாயோ (அதிகாரத்தை உணர்த்திற்று). ஆக+அலா: ஆகலா: ஆகமாட்டாது. சினம் கொண்டெழுந்த விசுவாமித்திரனைப் ‘பொறுத்தி’ எனக் கூறி அமைதியுறச் செய்தபின். மன்னனை நோக்கி. ‘உன் மகனுக்கு. ‘உறுத்தலாகலா உறுதி’ எய்தும் நாள் இது. இதை மறுத்தியோ’ என வசிட்டன் கூறினான் என்பது கருத்து. 15 |