குருவின் வாசகம் கொண்டு - குல குருவான வசிட்ட முனிவனது சொற்களைச் செவியேற்றுக் கொண்டு; கொற்றவன் - மன்னனாகிய தயரதன் (பக்கத்திலுள்ள பணியாட்களைப் பார்தது); திருவின் கேள்வனை - (இலக்குமியின் நாயகனான திருமாலின் அவதாரமான) ராமபிரானை; கொணர்மின் சென்று என - சென்று அழைத்துக் கொண்டு வருக என்று சொல்ல; வருக என்றனன் - (பணியாட்கள் சென்று ராமனை அடைந்து) தந்தை வருக என அழைத்தார்;என்னலோடும் - என்று சொல்லவே; அறிவின் உம்பரான் - அறிவில் உயர்ந்து விளங்கும் ராமபிரான்; வந்து அருகு சார்ந்தனன் - புறப்பட்டு வந்து. மன்னனருகில் சேர்ந்தான். குரு: குல குருவாகிய வசிட்டன். வாசகம்: சொல் (பேச்சு). கொண்டு: ஏற்றுக்கொண்டு. கொண்மின்: அழைத்துவாருங்கள் ‘கொணர்மின்’ என்றதால் ஏவப்பட்டோர் பலர் என்பது புலனாம். வருக: வியங்கோள் வினைமுற்று. சார்தல் - சேர்தல் உம்பர் தலைமை அறிவின் உம்பரான்: மேலான அறிவுடையவன் ‘ஞான நாயகன்’ என்னலுமாம்.17 |