பக்கம் எண் :

242பால காண்டம்  

ஐயன்:     மேலோன். அறன்:அறம். அறனல்லவும் என்பதால் மறன்
அன்று.  என்பது  குறிப்பு.  அல்லவும்  என்பதன்   ‘உம்மை’   அறன்
அல்லாதது  நேராது  என்பது  உணர்த்தும்.  மெய்ய:    அண்மைவிளி.
‘மெய்  நெறிநின்று  ஒழுகுபவனே’ என்பது பொருள். கொடு:  கொண்டு
என்பதன்  இடைக்குறை. ஆறு: விதம். அறம் செய்யும் விதம்   என்பது
கருத்து. முனிவன் ஏவலுக்கு இராமன் இசைந்தான் என்பது கருத்து.   45
 

384.கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை. அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா.
செங் கைச் சூல வெந் தீயினை. தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.

 

கங்கைத்  தீம்புனல் நாடன் கருத்தை-  கங்கையின்  இனிய  நீர்
பாய்ந்து   வளப்படுத்தும்  கோசல  நாட்டை  உடைய   இராமபிரானது
எண்ணத்தை; அம்மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா -  அந்த
நெருப்பைப் போன்ற தாடகையை மனத்தில் கொண்டு;  செங்கைச் சூல
வெம்தீயினை  
-  தனது  சிவந்த  கையிலுள்ள   சூலமாகிய  கொடிய
நெருப்பினை;  தன்  வெம்   கண்தீயொடு   -    தனது   கொடிய
கண்களிலிருந்து சொரியும் நெருப்புடன்; மேல்செல வீசினான் - ராமன்
முதலிய மூவர் மேலும் சென்று படும்படி எறிந்தாள்.

தீம்புனல்:  இனிய  நீர்.  புனல்நாடு: மருதநிலம். தன் கண் தீயுடன்
எறியும்  தாடகையின்  சூல   வெந்தீயினை  அவிக்கும் ஆற்றலுடைய
இராமனது  சிறப்புத்  தோன்ற  ‘’கங்கைத் தீம்புனல் நாடன்’’ என்றார்.
நாடன்:  நாட்டை  உடையவன். உயிர்களைக் கொல்வதால் ரத்தக்கறை
படிந்த  கைகளை  உடையவளாதலின்  ‘’செங்கை’’  என்றார். கொளா:
கொண்டு   (செயா   என்ற   வாய்பாட்டு   வினைஎச்சம்).  செம்மை:
சிவப்புமாம். வெம்மை: வெப்பம்.                             46
 

385.புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ. முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல். உவா
மதியின்மேல் வரும் கோள் என. வந்ததே.

 

புதிய  கூற்று அனையாள்-  புதிய   எமனைப்   போன்றவளாகிய
தாடகை; புகைந்து ஏவிய  கதிர்கொள்  மூவிலைக்  காலவெம்தீ  -
கோபித்து  வீசிய  ஒளிபொருந்திய  இலை போலும் மூன்று முனைகளை
உடைய  பகைவர்களுக்கு  இறுதிக்   காலம்   தரும்  கொடிய தீயாகிய
அந்தச் சூலமானது; முனி  விதியை மேற்கொண்டு நின்றவன்மேல் -
முனிவனது   கட்டளையை  மேற்கொண்டு  நின்ற  இராம   பிரான்மீது;
உவாமதியின் மேல்வரு கோள்  எனவந்ததே  
- முழுமதியின் மேல்
வரும் இராகு என்னும் கோள் போலப் பாய்ந்து வந்தது.