பக்கம் எண் :

  வேள்விப் படலம்259

‘முன்னாள்’ என்பது இடைகுறைந்து ‘முனாள்’ என நின்றது.  முன்பு
பிறந்தவள்  (தமக்கை) என்பது பொருள். கேளா: கேட்டு  (செயா என்ற
வாய்  பாட்டு   உடன்பாட்டு  வினையெச்சம்.  செம்மல்:   தலைமகன்.
அழகன்.  இளையகோ:  இளங்கோ  (இளவரசன்).  மை: மேகம்.  மலி:
நிறைந்த   அல்லது  கருமை  நிறைந்த  எனினுமாம்.  மை:   கருமை.
இருநதி: உரிச்சொல்தொடர்.

எனது   தமக்கையான ‘கவுசிகை’ இந்த நதியானாள் என்று முனிவன்
கூறக்  கேட்ட இராம இலக்குவர் அதிசயித்தனர். பின்னர் சிறிது  தூரம்
செல்ல.  எதிரே  காணப்பட்ட சோலை ஒன்றைக் கண்டு. இது  யாதென
முனிவன் கூறலானான் என்க.                                 14
 

408.‘தங்கள் நாயகரின் தெய்வம்
   தான் பிறிது இலை’ என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத்
   தூயது; மற்றும் கேளாய்;
எங்கள் நான்மறைக்கும். தேவர்
   அறிவிற்கும். பிறர்க்கும். எட்டாச்
செங் கண் மால் இருந்து. மேல்நாள்
   செய் தவம் செய்தது அன்றே.

 

தங்கள்  நாயகரின் தெய்வம் தான்பிறிது  இலை  -   தங்களது
கணவரைக்    காட்டிலும்   தெய்வம்   வேறுஇல்லை;  என்றெண்ணும்
மங்கைமார்
- என்று கருதும் பெண்ணரசிகளது; சிந்தை போலத் தூயது
-  மனத்தைப்போல  (இச்சோலை) தூய்மையானது; மற்றும் கேளாய் -
பின்னும் சொல்லுகிறேன்  கேட்பாயாக;  எங்கள்  நான் மறைக்கும் -
எங்களுடைய  நான்கு   வேதங்களுக்கும்;   தேவர்  அறிவிற்கும்  -
தேவர்களின்    நுட்பமான    அறிவுக்கும்;    பிறர்க்கும்   எட்டாச்
செங்கண்மால்  
-   மற்றவர்களுக்கும்  (உள்ளம்.  உரை) செயல்களால்
எட்டமுடியாத  திருமால்;  இருந்து  மேல் நாள் - இங்குத் தங்கி முன்
ஒரு  காலத்திலே; செய்தவம் செய்ததன்றே - செம்மையான தவத்தைச்
செய்த இடமல்லவா?

நாயகன்:   தலைவன்.  கணவன். ‘மங்கை’ பருவப் பெயரேயாயினும்
பெண்களைப்   பொதுவாக   இப்பெயரில்  குறிப்பிடுவது  மரபு.  மார்:
பலர்பால்   விகுதி.  சிந்தை:   மனம்.  ‘எங்கள்  நான்மறை’  என்றது.
அறநெறி  நிற்கும்  அறிவுடையோர்க்கு   உரியது  என்பதை உணர்த்தி
நின்றது.  எட்டா:  எட்டாத  (ஈறுகெட்ட   எதிர்மறைப்  பெயரெச்சம்).
எட்டு:  பகுதி.  செங்கண்மால் தவம் செய்த  சிறப்புடையது இச்சோலை
என்றானென்க.  அன்றே: அல்லவா என்பது  பொருள். அசை எனினும்
பொருந்தும்.                                               15
 

409.‘’பாரின்பால். விசும்பின்பாலும். 
   பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்’’ என்பான்; ‘’அவன் செய்மாயப்
   பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார்