காலம் நுனித்து உணர்- முக்காலங்களையும் சூக்குமமாகக் கணித்து எதனையும் உணரவல்ல; காசிபன் என்னும் வால் அறிவற்கு - காசிபன் என்ற பெயருடைய மெய்யறிவுடைய முனிவனுக்கும்; அதிதிக்கும் ஒருமகவாய் - அவனது மனைவியான அதிதி என்பவளுக்கும் ஒப்பற்ற குழந்தையாக; நீல்நெடுந்தகை வந்து - நீல நிறத்தை உடைய திருமால் வந்து பிறந்து; ஓர் ஆல்அமர் வித்தின் - ஆலமரம் நுண்ணுருவில் தங்கியிருக்கத் தகுந்த அந்த ஆலம் விதையை ஒத்து; அரும் குறள் ஆனான் - அரிய குறள் உருவத்தில் வளர்ந்து வந்தான். காலம்: முக்காலங்களையும் உணர்த்தி நின்றது. நுனித்துணர்: நுண்மையாய் அறிதல். காசிபன்: பிரமனுக்கு மரீசி என்பனது மகன். வாலறிவன்: மெய்யறிவு படைத்தவன். நீல நிறத்து நெடுந்தகை. திருமால். ஒரு பெரிய ஆல மரத்தினது முழு வளர்ச்சிக்குரிய நுண்ணிய உறுப்புக்கள் அதன் வித்தினுள் அடங்கியிருப்பது போலப் பின்னர் எடுக்கத் தக்க ‘ஓங்கி உலகளந்த’ திருமாலின் பேருருவத்தை உள்ளடக்கியிருப்பதை உணர்த்தும். ‘’ஆல் அமர் வித்தின் அருங்குறள்’’ என்ற உவமையின் நயமுணர்க. குறள்: இரண்டடி. எனவே. ‘குறளன்’ குறுகிய வடிவமுடைய வாமன மூர்த்தி என்க. 20 |