நினைக்கிலை - சுக்கிரனே! நீ நினைத்துப் பார்த்துக் கூறினாயில்லை; என் கை நிமிர்ந்திட - என்னுடைய கை மேலாக நிமிர்ந்து நிற்க; தனக்கு இயலா வகை வந்து தாழ்வது - தனது தன்மைக்குப் பொருந்தாத விதத்தில் தானே வந்து என் முன் தாழ்ந்து நிற்பது; தாழ்வு இல் கனக் கரியானது கைத்தலம் என்னின் - எவ்விதத்திலும் தாழ்வில்லாத மேகம் போன்ற கரிய நிறத்தை உடைய திருமாலின் கை என்றால்; எனக்கு இதன்மேல் நலம் - எனக்கு இதைவிட மேலான நன்மை; யாது கொல் என்றான் - ஏது இருக்கிறது என்று மாவலி கூறினான். நினைக்கிலை: நினைத்துப் பார்த்துச் சொல்லவில்லை. நிமிர்ந்து: ஓங்கி. மேலாக ‘இயலா வகை’ இதில் ‘இயலா’ என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ‘தாழ்வது......கைத்தலம்’ என்று முடிக்க. கனம்: மேகம். யாது: எது. கைத்தலம். கை; இங்கு உள்ளங்கையைக் குறித்து நின்றது. யாசிப்பவர் கையை விரித்து ஏற்றல் இயல்பாதலின் என்க. மேல்நலம்: மேலான நன்மை. யாது கொல் இதில் ‘கொல்’ எதிர் மறைப் பொருளை உணர்த்தி நின்றது. என்கை உயர்ந்து மேலே நிற்க. தானே வந்து என்முன் தாழ்ந்து நிற்பது - தனக்குப் பொருந்தாத வகையிலே. வாமனனாக வந்த திருமாலின் கை என்றால் இதைவிட மேலான நன்மை எது இருக்கிறது என்றான். மாவலி என்பது கருத்து. 26 |