இனைய நாட்டினில் - இத்தகைய மிதிலை நாட்டிலே; இனிது சென்று - இனிய மகிழ்ச்சியோடு அடைந்து; இஞ்சி சூழ் மிதிலை - மதில்களால் சூழப்பட்டுள்ள மிதிலை நகரை; புனையும் அலங்கரிக்கின்ற; நீள்கொடிப் புரிசையின் - உயர்ந்த கொடிகளையுடைய புறமதிலின்; புறத்து வந்து இறுத்தார் - வெளியிலே வந்து தங்கினார்கள்; மனையின் மாட்சியை - (அவ்வாறு தங்கி) இல்லறத்திற்குச் சிறப்பான கற்பினை; அழித்து இழி - அழியச்செய்ததால் இழிவை அடைந்தன; மாதவப் பன்னி - பெருந்தவத்தனான கௌதமரின் மனைவியான அகலிகையின்; கனையும் மேடு உயர் - (சாப உருவில்) அடர்ந்த மேடாக உயர்ந்து தோன்றுகின்ற; கருங்கல் - கருங்கல்லாகக் (கிடப்பதனை); ஓர் வெள்ளிடைக் - ஒரு வெட்டவெளியிலே; கண்டார் - கண்டார்கள். விசுவாமித்திரன் முதலிய மூவரும் மிதிலையின் மதிலுக்குப் புறத்தே தங்கினர். அப்பொழுது கௌதம முனிவன் மனைவியான அகலிகை அம்முனிவனின் சாபத்தால் கல்லாய்க் கிடக்கும் இடத்தைப் பார்த்தார்கள். பன்னி: பத்நி(மனைவி) என்னும் வடசொல் பன்னி என மருவியது. 13 இராமனது திருவடி பட அகலிகை முன்னை வடிவம் பெறல். |