பக்கம் எண் :

474பால காண்டம்  

சூழியானை - முகபடாத்தை அணிந்த யானைகள்; இழி மதமழை-
ஒழுகுகின்ற மதப்பெருக்கு; அருமையால் - எப்பொழுதும்  நீங்காததால்;
தொய்யலை  
-  (மதநீரால்  தோன்றிய)  சேற்றை; கடந்தில - கடந்து
கரையேற  மாட்டாது; மையல்  உற்று  - மயக்கமுற்று; மொய்திரைக்
கடலென  
-  நெருங்கிய  அலைகளையுடைய  கடல்போல; முழங்கும்
மூக்குஉடை   
-  முழங்கும்  மூக்கோடு  கூடிய;  கைகளின்  - (தம்)
கைகளினாலே;  திசை நிலைக் களிற்றை - எட்டுத்திக்கு யானைகளை;
ஆய்வன
- துழாவி ஆராய்கின்றன.

(வி.ரை)    யானைகள் சேற்றில் விழுந்து கரையேற மாட்டாமல் கடல்
போல  ஒலித்துக்  கைகளால்  திசையானைகளைத்    துழாவித்  தேடின
என்பது.  தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. தொய்யல் - சேறு   நிரம்பிய
பள்ளம்.                                                   19
 

751.சூருடை நிலை என. தோய்ந்தும் தோய்கிலா
வாருடை வன முலை மகளிர் சிந்தைபோல்.
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும்.
பாரிடை மிதிக்கில - பரியின் பந்தியே.

 
  

பரியின்  பந்தி- குதிரைக் கூட்டங்கள்; சூர் உடை நிலை என -
தெய்வத்தின் தன்மை போலவும்; தோய்ந்தும் தோய்கிலா - வெளியில்
அன்பர்போலக்  காட்டியும் (அகத்தில்) அன்பு கொள்ளாத; வார் உடை
வனமுலை  
-  கச்சு   அணிந்த  அழகிய  தனங்களையுடைய; மகளிர்
சிந்தைபோல்  
-   (விலை)  மகளிர்  மனம்  போலவும்;  தாரொடும்
சதியொடும்   
-   கழுத்தில்    அணிந்துள்ள  கிண்கிணி  மாலையின்
ஒலியோடும்;   தாவுமாயினும்  -  அடிவைத்துத் தாவிப் பாயுமாயினும்;
பாரிடை மிதிக்கில
- பூமியில் பொருந்தாமல் சென்றன.

விலைமகளிரின்     சிந்தையானது பெற்ற  பொருளளவிற்கு  ஏற்பத்
தாவிக்  கொண்டே  இருப்பதுபோலக்  குதிரைகளும்   ஒரு   நிலையில்
நில்லாமல்  தாவின  என்பது.   தார்  (ஒலி) - ஆகுபெயர். சதி - ஒத்த
அடி வைப்பினால் உண்டாகும் ஓசை - ஆகுபெயர்.

குதிரைகள்     பூமியின்மேல்  செல்லும்போது  அவற்றின் பாதங்கள்
பூமியிலே   படாமல்  இருப்பதற்கு  தேவதைகளின்   பாதம்   பூமியில்
பதியாமல்  இருப்பதையும்.  வேசியரின்  மனம்   ஒருவர்மேல்   அன்பு
கொள்ளாமலே செல்வதையும் உவமையாக்கினார்.                 20

                                      ஊடிய மகளிரின் போக்கு
 

752.ஊடிய மனத்தினர். உறாத நோக்கினர்.
நீடிய உயிர்ப்பினர். நெரிந்த நெற்றியர்;
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்;
ஆடவர் உயிர் என அருகு போயினார்.