பக்கம் எண் :

662பால காண்டம்  

மனை     தா என்று    விசுவாமித்திரர் கேட்டபோது (தசரதனைவிட்டு)
நீங்கிய  உயிர்  (மீண்டும்  அவனுடம்பில்)  வந்து    சேர்ந்தாற்போலே;
அரசன்  மாடு  அணுகினான்  
-  தசரதச்  சக்கரவர்த்தியிடம்  வந்து
எய்தினான்.

“தேவரும்     தொழு கழல் சிறுவன்” என்பதனால். தெய்வத்தன்மை
சுட்டியதோடு.   காட்சியை  நடையோவியப்  படுத்துகிறார்.   முன்பு  -
“நின்புதல்வர்  நால்வரிலும் கரிய செம்மல்  ஒருவனைத்  தந்திடுதி  என
உயிர்  இரக்கும்  கடுங்கூற்றின்  (விசுவாமித்திரர்)  உளையச்  சொன்ன”
(கம்ப.  324)  போது என விரிக்க. விசுவாமித்திரரிடம்  தசரதன்  இராம
லக்குவரைக்   கையடைப்படுத்திய    போது.    மன்னன்    இன்னுயிர்
வழிக்கொண்டால்   என”   (கம்ப.   334)    என்று  கவிஞர்  பிரான்
உவமித்திருந்ததை  மறவாமல்  நினைவுகூர்ந்து  அன்றுபிரிந்த   உயிரை
இன்று   இணைக்கின்றார்   என்க.   “ஓவியத்து    எழுத    ஒண்ணா
உருவத்தாய்”   (கம்ப.  4020)  எனப்படுபவன்  ஆதலின்.    “ஓவியம்
சுவைகெடப்பொலிவதோர் உருவொடே” என்றார்.                22
 

1051.அனிகம் வந்து அடி தொழ.
   கடிது சென்று. அரசர்கோன்
இனிய பைங் கழல் பணிந்து
   எழுதலும். தழுவினான்;
மனு எனும் தகையன்
   மார்பிடை மறைந்தன. மலைத்
தனி நெடுஞ் சிலை இறத்
   தவழ் தடங் கிரிகளே.
 

(இராமன்)    அனிகம்  வந்து  அடிதொழக்  கடிது  சென்று  -
(இராமபிரான்  தன் தந்தையின்)  சேனைகள்  வந்து தன்  திருவடிகளை
வணங்க. விரைந்து சென்று;அரசர் கோன் இனிய பைங்கழல் பணிந்து
எழுதலும்   
-   தசரதச்   சக்கரவர்த்தியின்   (காண்பதற்கு)   இனிய
பசுங்கழல்கள்  அணிந்த  பாதங்களை வீழ்ந்து  வணங்கி  எழுந்தவுடன்;
தழுவினான்  
- (சக்கரவர்த்தி தனது பெறற்கரிய  மைந்தன்  இராமனை)
அணைத்துக்   கொண்டான்;   மனுஎனும்   தகையன்  மார்பிடை -
ஆதிமனுச்  சக்கரவர்த்தி  என்று  சொல்லத்தக்க   குணங்களையுடைய
தசரதனின் மார்பிலே;     மலைத்தனிநெடுஞ்சிலை       இறத்தவழ்
தடங்கிரிகள்    மறைந்தன
- மேருமலை யாகிய  ஒப்பற்ற  சிவதனுசு 
ஒடியும்படி செய்த  (இராமனுடைய)  தோள்களாகிய   மலைகள் மறைந்து போயின.

“மார்பிடைத்     தோள்கள் மறைந்தன” என்றதனால்.   தயரதனின்
மார்பகலம் வியந்தவாறு. “மலையை முறித்த  மலை”  என்று இராமனின்
தோள்களை   ஒரு   நயம்படக்   கூறினார்.   தயரதன்     நாடாண்ட
நேர்த்தியை.    “மனு    எனுந்தகையன்”     என   ஒரு   தொடரால்
உணர்த்திவிட்ட   திறம்  உணர்க.  “தனு   அன்றித்துணை   இல்லான்;
தருமத்தின்  கவசத்தான்;  மனுவென்ற  நீதியான்”    (கம்ப.  650) என
முன்பும் புகழ்ந்த திறம் ஓர்க.                                 23