வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்- அந்நகரத்தை வாழ் இடமாகக் கொண்ட பெண்டிர் தொகைக்கும் அளவு என்பது இல்லை; ஐயன் பொற்புக்கு அளவிலை இராம பிரானது அழகுக்கும் அளவு என்பது இல்லை; ஆதலால். எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான்? - (அந்த மங்கையர் உள்ளத்தில் எய்ய வேண்டிய மலர்க் கணைகளின் தேவைக்கும் ஓர் அளவில்லை) ஆதலினால் (மலர்) அம்பெய்கின்ற அழகிய வில்லினையுடைய மன்மதனும் யாது செய்வான்?; கை அம்பு அற்று - (தன்) கையில் உள்ள (மலர்) அம்புகள் எல்லாம் தீர்ந்து போய்; உடைவாளினும் கை வைத்தான்- (அம்மாதர் மேல் பாய்ச்சும் பொருட்டு) உடைவாளின் மேலும் கையை வைத்தான். காமன் “கையம்பு அற்று உடைவாளினும் கை வைக்க” நேர்ந்தது எனக் குறித்தவாற்றால் மன்மதன் தோல்வியும் மகளிர் ஆற்றாமையும் இராமனின் உடல் அழகும் குண அழகும் ஒருங்கே வெளிப்படுத்தியவாறு மன்மதனுக்கும் அங்குள்ள மகளிர்க்கும் நடந்த போரின் தீவிர நிலை தெரிவித்தவாறுமாம். தொலைவிலிருந்தால் அம்பாலும் அருகிலிருந்தால் வாளாலும் தாக்குவது போர் முறையாதலின். மன்மதன் மகளிரை மிக நெருங்கி வந்துவிட்டான் என்பதை “உடை வாளினும் கை வைத்தான்” என்பதனால் உணர்த்தினார். 33 |