மருள் மயங்கு மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்- ‘இராமன் (ஆகிய இவன் எது கேட்டாலும் தரவுள்ள) மோக மயக்கில் உள்ள மகளிர் எவரிடத்திருந்தும் ஒரு பொருளையும் விரும்பாதவனாய்; இவன் போகின்றதே! - இவன் இப்படிப் போகின்றானே! (இது தகுமா?); கருணை என்பது கண்டறியான் - (இவன்) அருள் என்னும் (பெருங்) குணத்தின் தன்மையைச் (சிறிதும்) அனுபவித்து அறியானோ?; பெரும் பருணிதன்கொல்? - (மகளிரைச் சிறிதும் விரும்பாக் குணம்) பரிணமித்த சிறந்த ஞானியோ?; படுகொலையான் என்றாள் - (ஞானி மணந்து கொள்ளச் செல்லான்) ஆதலின் (இவன் பெண்களைக் கொல்லும்) படுகொளையாளனே ஆகல் வேண்டும் என்றாள் ஒருத்தி. பருணிதன்: குணங்கள் பரிணமித்த பக்குவ ஞானி. புன்னகை. கடைக்கண் வீச்சு முதலியவை மங்கையர் மாட்டு ஆடவர்க்குக் கிடைக்கும் பொருள்கள். இராமன் இத்தகைய எந்தப் பொருளையும் மகளிரிடத்துப் பெற விரும்பாமல் செல்கின்றானே என்பாள். “மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்; போகின்றதே! என வியந்தாள். விருப்பு வெறுப்பு ஆகியவற்றையெல்லாம் இந்த இளம் வயதிலேயே வென்றுவிட்ட பக்குவ ஞானி போலும் இவன் என்பாள் “பருணிதன் கொல்!” என்று மேலும் வியந்தாள். 35 |