அச்சு என நினைத்த முதல் அந்தணன் - உலகத்து உயர்குண மாதர்களுக்கெல்லாம் ஆதாரம் சீதையே எனக் கருதிய முதன்மைச் சிறப்புக்குரிய விசுவாமித்திரமுனிவன்; நச்சுடை வடிக்கண் மலர்நங்கை இவள் என்றால் - வில்வினை முறித்தால் கிடைத்தற்குரிய பரிசு. நஞ்சு தோய்ந்த கூரிய கண்களையுடைய மலர்மங்கையாகிய இச்சீதை என்றால்; பச்சைமலை ஒத்த படிவத்து அடல் இராமன் - பசியமலை போன்ற வடிவுடைய வலிமை படைத்த இராமபிரான்; இச்சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ நினைந்தான் - (ஒரு மலை போன்ற) இந்தவில் கிடக்கட்டும்; ஏழுமலைகளைக் கொண்டுவந்து இட்டாலும் (இவளைப் பெறும் காதல் நினைவால் அத்தனையையும் உடனே) முறித்துப் போடமாட்டானோ? என்று நினைத்திருந்தான். “ஒருவில் பெண்மை. என்று உரைக்கின்ற. உடலினுக்கு உயிர்” (கம்ப. 2059) என்றும். “மடந்தைமார்களில் திலதம்” (கம்ப. 2072) எனவும். “தெரிவைமார்க் கொரு கட்டளை” (கம்ப.. 2078) எனவும் உரைக்கப்படுவாளாகிய சீதையை மடந்தை மார்க்கு இவள் ஓர் ‘அச்சு’ அனையவள் என விசுவாமித்திர முனிவன் பொருத்தமுற நினைத்தான். தவத்திற்கோர் உதாரணப்படிவம் (அச்சு) என நினையத்தக்க விசுவாமித்திர முனிவன் என. “அச்சென நினைத்த முதல் அந்தணன்” எனற்குப் பொருள் உரைப்பாருமுளர். “பச்சைமலை ஒத்த படிவத்து அடல் இராமன்” என்பது. பச்சை மா மலைபோல் மேனி” (திருமாலை. 2) எனும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பாசுரத்தை நினைப்பிப்பது. சிலை என்பது மலை. வில் எனும் இருபொருளிலும் வந்தது. கிடைக்கும் பொருள் உயர்ந்ததாயின் அரிய செயலும் எளியதாகும் என்பது முனிவன் கருத்து. 36 |