பக்கம் எண் :

  கடிமணப் படலம்755

முந்தைய   பாடலில்.  முத்தும்   மணியும்   அணியாகப்  பெண்கள்
அணிந்ததைக்  கூறிய கவிஞர்பிரான். இப்பாடலில்  அவர்கள்  இருக்கும்
மணிமாட  வீடுகளும்   அவ்வணிகளை  யணியத்  தொடங்கின  என்று.
நகரத்தின் வள மிகுதி கூறுகின்றார்.  

அந்நகர   மங்கையரே  மணப்பொருள்களின்  சங்கமம்;  ஆதலால்.
அவர்கள்    செல்லுமிடம்    எல்லாம்     நறுமணங்களைச்    சிந்திச்
சென்றார்கள்  என்பார்.  “சந்தனம்.  அகில்.  நாறும்  சாந்தொடு  தெரு
எங்கும்  சிந்தினர்.  திரிவாரும்” என்றார்.  இல்லத்தை  நறுமணமாக்கிய
இவர்கள்.   இப்பொழுது.    தெருவில்   திரிந்து.   தெருவையெல்லாம்
நறுமணமாக்குகின்றனர்  என்க.  தாங்கள்  அணிந்தது  போக.  எஞ்சிக்
கிடந்த  விலைமதிப்பற்ற  முத்து.   மணிமாலைகளை  மாளிகைகளுக்குச்
சூட்டத் தொடங்கினர் என்பார். “நிரை மாடத்து  அந்தமில்  விலையாரக்
கோவைகள்  அணிவாரும்”  என்றார். அந்த  மணி  மாடங்கள் முன்பே
நவரத்தினங்கள்  பதிக்கப் பெற்று. இந்திரவில்லை  நாணும்படி  செய்யும்
ஒளியுடையன  என்பார்.  “இந்திர தனுநாணும்  எரிமணி  நிலை மாடம்”
என்றார்.   இம்மாடங்கள்   ஒன்பது  வகை   நிறமுடைய   நவமணிகள்
பதிக்கப்பெற்றவை;  வான  வில்லோ ஏழுநிறமே கொண்டது  ஆதலால்.
தாழ்வுணர்ச்சியால்   அது  நாணும்  என்பார்.  “இந்திர   தனுநாணும்”
என்றார்.  

சாந்து   -  தைலம்  எனினுமாம்.  இறை  திருமேனிகட்குச்  சாத்தும்
தைலக்காப்பை. “சாந்து சாத்துதல்” என்பர்.                     24
 

1184.தளம் கிளர் மணி கால.
   தவழ் சுடர் உமிழ் தீபம்.
இளங் குளிர் முளை ஆர் நல்
   பாலிகை இனம். எங்கும்.
விளிம்பு பொன் விரை நாற.
   வெயிலொடு நிலவு ஈனும்.
பளிங்குடை உயர் திண்ணைப்
   பத்தியின் வைப்பாரும்.

 

விளிம்பு  பொன் விரை நாற- ஓரங்கள் எல்லாம் பொன் பதிக்கப்
பெற்றுள்ள பொன் தகடுகள் மணம் கமழ; வெயிலொடு நிலவு ஈனும் -
ஞாயிற்றின்  வெப்பமும்.  நிலவின்   தண்மையும்   ஒருங்கே  உமிழும்
(சூரிய.   சந்திர   காந்தக்   கற்கள்   என்னும்);  பளிங்குடை  உயர்
திண்ணைப்  பத்தியின்  
-  படிகக்  கற்கள்  பதிக்கப்பெற்ற  உயர்ந்த
திண்ணைகளின்   வரிசைகளில்;  தளம்   கிளர்   மணி   கால   -
அடித்தளத்தில்   பதிக்கப்   பெற்றுள்ள   மாணிக்கங்கள்  ஒளிசிந்தவும்;
தவழ் சுடர் உமிழ்தீபம்
- பரவுகின்ற ஒளி உமிழ்கின்ற  தீபங்களையும்;
குளிர் இளமுளை ஆர் நல் பாலிகை இனம்
- குளிர்ந்த இளமையான
விதைமுளைகள்   பொருந்தின   நல்ல   பாலிகைக்    கிண்ணங்களின்
வகைகளையும்;     எங்கும்    வைப்பாரும்    -    (அந்நகரத்தில்)
எவ்விடத்திலும் வைப்பாரும் (ஆயினர்).  

சூரிய     ஒளியில் வெயிலும். சந்திர ஒளியில் தண்ணீரும் உமிழ்வது
சூரிய  காந்தக்  கல்.  சந்திரக்கல்   எனும்   இரண்டின்  இயல்பாதலின்.
அவை இரண்டும்