ஒருகால் வரு கதிராம்- ஒற்றைச் சக்கரத்தினையுடைய தேரின் மீது வருகிற சூரியன்; என ஒளிகால்வன - என்னுமாறு ஒளி விடுவனவும்; உலையா - (எளிதில்) அழிக்கப்படாதனவும்; வருகார் தவழ் வடமேருவின் வலி சால்வன - வானில் தவழும் மேகம் உலாவும் வடமேரு மலையினது வலிமை பொருந்தியனவும்; வையம் அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவனதாம் - நிலவுலகத்தார் நெருங்குதற்கும் இயலாத (தெய்வத் தன்மையுள்ள) சிற்பத் தொழிலைப் புரிபவனான விசுவ கர்மாவினால் (வடிவு) அமைக்கப்பட்டனவும்; யாவையும் ஏலாதன - எவற்றையும் தமக்கு உவமையாக ஏற்காதவையுமாகிய; இருகார் முகம் -இரண்டு விற்கள்; மேல்நாள் உள - முற்காலத்தில் இருந்தன. “ஒருகால் வரு கதிர்” என்பதில் கால் என்பது சினையாகுபெயராய். ஒரு காலையுடைய சூரியன் தேரினைக் குறித்தது. வையம் - இடவாகு பெயராய் வையத்து மக்களைக் குறித்து நின்றது. “அவன் திறமைக்குப் பக்கத்தில் யாரும் செல்ல முடியாது” எனும் வழக்கையும்கொண்டு. “வையம் அருகா வினைபுரிவான்” என்று விற்களையுருவாக்கிய விசுவகர்மனைப் புகழ்ந்தார். இது முதல் ஆறு கவிகள் - சிவதனுசின் வரலாறு. 26 |