பக்கம் எண் :

186அயோத்தியா காண்டம்

கோசலை துயரம்  

1613.ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.

     ஆங்கு - அப்பொழுது; அவ் வாசகம் என்னும் அனல் - (இராமன்
காடு செல்லவேண்டும் என்று தயரதன் கூறிய) அந்த வார்த்தை என்கிற
நெருப்பு;  குழை தூங்கு தன் செவியில்தொடராமுனம் - காதணி
அசைகின்ற தன்னுடைய காதுகளில் வந்து  விழுதற்கு முன்னமே (கோசலை);
ஏங்கினாள்;  இளைத்தாள்; திகைத்தாள் - இரங்கி,  மெலிந்து, தடுமாறி;
மனம்வீங்கினாள்;  விம்மினாள்; விழுந்தாள் - மனம் வீங்கி, வருந்தி,
மயக்கமுற்றுக்கீழே விழுந்தாள்.

     ‘வாசகம் என்னும் அனல்’  என்பது,  ‘ஊர் எனப்படுவது உறையூர்’
என்றார்போல வாசகத்தின்கொடுமை உணர்த்தி நின்றது. நெருப்புச்
சேர்த்தாரைச் சுடும்,  இவ்வாசகம் சேராமுன்னமே சுடும்தன்மை படைத்தது
என்பதாம். தூங்குதல் - தொங்கதல்; காதில் இறுக அணிவது தோடு; தொங்க
அணிவது  குழை;  தொங்கூட்டம் என்று இவ்வணியைக் கூறுவர். ‘அரோ’
ஈற்றசை.                                                      8

1614.‘வஞ்சமோ, மகனே! உனை, “மா நிலம்
தஞ்சம் ஆக நீ தாங்கு” என்ற வாசம்?
நஞ்சமோ! இனி, நான் உயிர் வாழ்வெனோ?
அஞ்சம்; அஞ்சும்; என் ஆர் உயிர் அஞ்சுமால்!’

     ‘மகனே! - ;  உனை ‘மாநிலம் தஞ்சம் ஆக நீ தாங்கு’  என்ற
வாசகம் -
உன்னைநோக்கி (தசரத சக்கரவர்த்தி)  நீ இந்தப் பூமியைப்
பற்றுக்கோடாக இருந்து காப்பாற்றுவாயாக  என்று சொல்லிய வார்த்தை;
வஞ்சமோ? - வஞ்சனையோ?; நஞ்சமோ? - விடம் போலக் கொடியதோ?;
நான் இனி உயிர் வாழ்வெனோ? - நான்இனிமேல் உயிர்வாழ
மாட்டுவேனோ?;  என் ஆர் உயிர் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் - என்
அரிய உயிர் மிகவும் பயப்படும்.’

     அரசாளச் சொல்லியிராவிட்டால் காடு போகவும் நேர்ந்திராது என்ற
கணிப்பால் கோசலை‘வாசகம் வஞ்சமோ’ என்றாள்.  ‘தஞ்சம் இவ் உலகம்
நீ தாங்குவாய் என’  இத்தொடர் பரதனைநோக்கி வசிட்டன் கூறியதாகப்
பின்னரும் வருதல் (2255.)  அறிக.  முன் இனிதாகிடும்நஞ்சுகூடப் பின்
கொல்லும்,  அதுபோல்,  ‘அரசாள்க’ என்றது  இனிதாகிப் பின்னர்க் ‘காடு
ஏகு’என முடிதலின் ‘நஞ்சமோ’ எனக் கூறினாள் - ‘ஆல்’  ஈற்றசை. 
‘அஞ்சும்’ என்பதுஅடுக்கு.                                       9

1615.கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப