பக்கம் எண் :

214அயோத்தியா காண்டம்

     ‘நிருபர்க்கு ஒரு பழிபற்றிட (1275) என்ற பரசுராமப் படலப்பாடலில்,
‘இருபத்தொரு படிகால்'  என்று  இந்நிகழ்ச்சி கூறப்பெறுதல் அறிக.
‘இருபத்தொருகால்அரசு களைகட்ட பரசுராமன், மேவரும் சாந்திமத்தீ
வரண் கருதி இருத்தி்ய செம்பொன் திருத்தகுமுடியும்' என்னும் முதலாம்
இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இதனைக் கூறும். அடுமா -அடுமாறு.   56

1662."கறுத்தாய் உருவம்; மனமும்
     கண்ணும் கையும் செய்யாய்;
பொறுத்தாய் பொறையே; இறைவன்,
     புரம் மூன்று எரித்த, போர் வில்
இறுத்தாய்; "தமியேன்" என்னாது,
     என்னை இம் மூப்பிடையே
வெறுத்தாய்; இனி, நான் வாழ்நாள்
     வேண்டேன்! வேண்டேன்! என்றான்.

     ‘உருவம் கறுத்தாய்! - திருமேனி கறுத்திருப்பவனே;  மனமும்
கண்ணும் கையும்செய்யாய்! -
உள்ளமும் கண்ணும் கையும் செம்மையாக
இருப்பவனே;  பொறையேபொறுத்தாய்! - பொறுமையையே
தரித்திருப்பவனே;  இறைவன் - சிவபிரான்;  மூன்று புரம் எரித்த
போர்வில் இறுத்தாய்! -
முப்புரங்களை எரித்த காலத்துப் பிடித்த
போர்க்குரிய வில்லை (சீதா கல்யாணத்துக்கு முன்) ஒடித்தவனே; ‘தமியேன்'
என்னாது
-தனித்துத் துணையின்றி உள்ளேன் என்ற கருதாது;  என்னை
இம் மூப்பிடையே வெறுத்தாய் -
என்னை இம்முதுமைக் காலத்தில்
வெறுத்திட்டாய்;  இனி நான் வாழ்நாள் வேண்டேன்வேண்டேன்' -
இனிமேல் நான் வாழும் நாளை விரும்பமாட்டேன்;  என்றான் - .

     இராமன் சிறப்புகளை எல்லாம் நினைந்து நைந்துருகுகிறான் தயரதன்.
‘வேண்டேன், வேண்டேன்'புலம்பலில் வந்த அடுக்கு. உள்ளத்துக்குச்
செம்மை கோட்ட மின்மையாம்.  மற்றவைநிறம்.                    57

1663.‘பொன்னின் முன்னம் ஒளிரும்
     பொன்னே! புகழின் புகழே!
மின்னின் மின்னும் வரிவில்
     குமரா! மெய்யின் மெய்யே!
என்னின் முன்னம் வனம் நீ
     அடைதற்கு, எளியேன் அல்லேன்;
உன்னின் முன்னம் புகுவேன்,
     உயர் வானகம், யான்' என்றான்.