தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு - பகைவரது கணையை ஒத்த கொடிய வார்த்தையை மேலும் கொடுமையாகச் சொன்ன கைகேயிக்கு; அவ் அரம் பொருத வேல் அரசன் - அந்த அரத்தால் அராவிக் கூர்மை செய்யப்பெற்ற வேலை உடைய தசரதன்;ஆய்கிலாது - ஆராயாமல்; ‘இவ் வரம் தருவென்’ என்று ஏன்றது உண்டு - இந்த வரத்தைத் தருவேன் என்று ஒப்புக்கொண்டது உண்டு அவ்வளவே; என்றான்- தயரதன் உன்னைக் காட்டுக்கு ஏகும்படி நேராக ஆணையிடவில்லை. கைகேயிக்கு வரம் தந்தேன் என்று ஒப்புக்கொண்ட அளவேதான். ஆகவே, இதில் அரசனது ஆணையை மீறல் என்பது இல்லை என்று இராமனுக்கு வசிட்டன் கூறினான். வரம்பை; வரம்பு; ஐகாரம் சாரியை. 163 இராமன் தந்த விளக்கம் | 1769. | ‘ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள் ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்; சான்று என நின்ற நீ தடுத்தியோ?’ என்றான் - தோன்றி நல் அறம் நிறுத்தத் தோன்றினான். | தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான் - விளங்கிய நல்ல தருமத்தை உலகில் நன்கு நிலைபெறுத்த அவதாரம் செய்த இராமன் (வசிட்டனை நோக்கி); ‘எந்தை - என் தந்தையாகிய தசரதன்; இவ்வரங்கள் - இந்த இரண்டு வரங்களையும்; ஏன்றனன் - தருவதாக - தந்ததாக ஒப்புக்கொண்டான்; ஈன்றவள் - என் தாய்; ஏவினாள் - ஆணை இட்டாள்; அது - அந்த உத்தரவை; யான் -; சென்னி ஏந்தினேன் - தலைமேல் தாங்கினேன்; சான்று என நின்ற நீ - இவற்றுக் கெல்லாம் சாட்சியாக இருந்த நீ; தடுத்தியோ? - இதனை விலக்குகிறாயோ?’ என்றான் -. வரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பிறகு அரசன் ‘என்னை நேராகக் காட்டுக்குச் செல்’ என்று பார்த்துச் சொல்லவில்லை; ஆதலின், காடு செல்வது அரசன் ஆணையன்று என்று வாதிடுவது பொருந்துமா?’ என்கிறான் இராமன். ‘சகல சாத்திரங்களும் அறிந்தவனாகிய நீ இப்படிச் சொல்லலாமா’ என்பான் ‘சான்று என நின்ற நீ’ என்றான் என்பதும் ஆம். 164 இராமன் புறப்பாடு | 1770. | என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்; நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக; குன்றன தோளவன் தொழுது, கொற்றவன் பொன் திணி நெடு மதில் வாயில் போயினான். |
|