பக்கம் எண் :

292அயோத்தியா காண்டம்

     மகளிர் தம் தலைமீது கைவைத்து அழுதவண்ணம் உளர் என்றார்.
‘கை தலையின்மீது உளார் பூங்கொடி ஒதுங்குவது போல் ஒதுங்கினர்’ என
முடிப்பினும்அமையும்.                                         192

1798.தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்,
முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக,
மலைக் குவட்டு அகவுறு மயிலின் மாழ்கினார்.

     தலைக்குவட்டு அயல் - உச்சிச் சிகரத்துக்குப் பக்கத்தில்;
மதிதவழும்மாளிகை - சந்திரன் தவழ்ந்து  செல்லும்  உயர்ந்த
மாளிகையினது; நிலைக் குவட்டு இடைஇடை - மேல் நிலை என்னும்
உப்பரிகை இடங்கள்தோறும்; நின்ற நங்கைமார் -நின்ற மகளிர்; இழி
கணீர். ஆலி முலைக் குவட்டு மொய்த்து  உக
- இறங்குகின்ற
கண்ணீ்ர்த் துளி தமது  முலைச் சிகரங்களில் நெருங்கிச் சிந்த;  மலைக்
குவட்டு
-மலைச் சிகரத்தில்; அகவுறு மயிலின் - அகவுகின்ற மயிலைப்
போல;  மாழ்கினார் - மயங்கினர்.

     மயில் அகவுதல் - கூவுதலாம்;  இங்கே மகளிர் அழுதலாம்.
நிலைக்குவட்டு  இடை இடை என்பது ‘பால்கனி’ என்று 
சொல்லப்படுவதாகவும்கொள்ளலாம்.                              193

1799.மஞ்சு என அகிற் புகை வழக்கு மாளிகை
எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்
அஞ்சனக் கண்ணீன் நீர் அருவி சோர்தர,
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார்.

     மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை - மேகம் போன
அகிற் புகையானது சஞ்சரிக்கும் மாளிகையினது; எஞ்சல் இல்சாளரத்து -
குறைதல் இல்லாத (காற்று வழங்கும்) பலகணி வழியாக (இராமனைக் கண்டு); 
இரங்கும் இன்சொலார் - வருந்தும் இனியசொல்லினை உடைய மகளிர்;
அஞ்சனக் கண்ணின் - மை தீட்டப் பெற்ற கண்ணிலிருந்து; நீர் அருவி
சோர்தர
- நீர் அருவியாக வழிய; பஞ்சரத்து இருந்து அழும் கிளியின்-
கூட்டின்கண் இருந்து  அழுகின்ற கிளியைப் போல;  பன்னினார் -
சொன்னதையே சொல்லிச் சொல்லிப் புலம்பினார்.

     பலகணி வழியாகத் தலைகாட்டி  அழும் மகளிர் கூட்டில் இருந்து
அழும் கிளி,  போன்றனர்என்க.  பன்னுதல் - திரும்பத் திரும்பச்
சொல்லுதல்,  கிளி சொன்னதைத் திரும்பத் திரும்பச்சொல்லும் ஆதலின்
இங்கே பன்னுதலுக்கும்  உவமையாயிற்று.                          194