பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 293

1800.நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி -
தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால்,
மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும்
பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே.

     நல் நெடுங் கண்களின் நான் நீர்த்துளிதன்ற - (மேல்மாடத்திருந்து
இராமனைக்கண்ட மகளிர்) நல்ல நீண்ட கண்களிலிருந்து  விழுந்த
நீர்த்துளியினது; நெடுந் தாரைகள்- நீண்ட நீர்ப்பெருக்கு;  தளத்தின்
வீழ்தலால்
- மேல் தளத்திலிருந்து கீழேவிழுகின்ற தன்மையால்; மாடமும்-
மாளிகையும்;  மன் நெடுங் குமரன் மாட்டு அழுங்கி- அரச
குமாரனிடத்தில் வருந்தி; பொன் நெடுங் கண் குழித்து - அழகிய பெரிய
இடத்தைக் குழி செய்து;  அழுவ போன்றவே - அழுகின்றன போல்வன.

     மேல் மாடியிலிருந்து  காணும் மகளிர் கண்ணீர்த் தாரை மாடித்
தளத்திலிருந்து  கீழே விழும் காட்சி மாளிகையே அழுவதுபோல் என்பது
தற்குறிப் பேற்றயிணயாம்- கண் - இடம் (விழி) சிலேடை.            195

1801.மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப்
புக்க இடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு
உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர் -
துக்கம் நின்று அறிவினைச் சூறையாடவே.

     துக்கம் நின்று - துயரம் நிலைத்து நின்று; அறிவினைச் சூறையாட-
அறிவைக் கொள்ளையிட்டுச் செல்ல (அதனால் உணர்வு மயங்கி);  மாதர் -
தாய்மார்கள்;  மக்களை மறந்தனர் - தங்கள் பிள்ளைகளை
மறந்துபோனார்கள்;  புதல்வர் - பிள்ளைகள்;  தாயரைப் புக்க இடம்
அறிந்திலர்
- தாய்மார்கள்புகுந்த இடத்தை அறியாதவர் ஆயினர்;  பூசல்
இட்டு
- அழுது ஆர்ப்பரித்து; உக்கனர் - மனம் உடைந்து; உயங்கினர் -
வாடி;  உருகி - கரைந்து;  சோர்ந்தனர் - சோர்வடைந்தார்கள்.

     பிள்ளைகள் தாயரைத் தேடும் இயல்புடையவர் ஆதலின்,  தேடிக்
கிடையாதவழி  பூசல் இட்டுஉயங்கி உருகினர் என்க. இதற்குக் காரணம்
தாயர் பிள்ளைகளை மறந்தமையே. அவர்கள் துக்கம்நின்று அறிவு
கொள்ளை போனதால் மறந்தனர்.  எனவே,  இராமன் காடு புகுவது
நகரமாந்தரைப்படுத்திய விதம் அறிவித்தவாறு - ‘ஏ’ காரம் ஈற்றசை.   196

1802.காமரம் கனிந்தெனக் கனிந்த மென் மொழி
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால்,
தே மரு நறுங் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன - தவள மாடமே.