பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 295

முழுவதிலும்;  மதில்புறத்து வீதி - மதிலின் புறம்பே உள்ள வீதிகள;
நிமிர்பசுங்கண் மாரியால் - பெருகுகின்ற கண்ணீர் மழையால்;  பொடி
அடங்கின
- புழுதிஅடங்கப் பெற்றன.

     கொடி கட்டப்பெற்ற மாடங்கள் கொடி இன்றி இருத்தல் வாத்தியங்கள்
ஒலியாமை முதலியனதுயரச் சின்னங்களாம்.  அயோத்தியின் துயரத்தை
உலகத்தின்மேல் ஏற்றிக் கூறியது உயர்வுநவிற்சியே; ஆயினும், உலகமே
வேதனைப் படுதற்குரியநிகழ்ச்சிதானே!                           199

1805.அட்டிலும் இழந்தன புகை; அகிற் புகை
நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால், கிளி
வட்டிலும் இழந்தன; மகளிர் - கால் மணித்
தொட்டிலும் இழந்தன, மகவும் - சோரவே.

     அட்டிலும் புகை இழந்தன - சமையற்கட்டுகள் (சமைத்தல்
இல்லாமையால்) புகையைஇழந்தன; நெட்டிலும்- உயர்ந்த மேல் மாடங்கள்;
அகில் புகை இழந்தன -(பெண்கள் கூந்தலைப் புகை செய்யாமையால்)
அகில் புகைகளை இழந்தன; கிளி -கிளிகள்;  பால் நிறைந்த வட்டிலும்
இழந்தன-
(ஊட்டுவார் இன்மையால்) பால்நிரம்பிய கிண்ணத்தை இழந்தன;
மகளிர் சோர - தாய்மார்கள் துயரத்தால்சோர்ந்தபடியால்;  மகவும் -
பிள்ளைகளும்;  கால் மணித் தொட்டிலும்  இழந்தன - கால் உடைய
மணிகள் அழத்திச் செய்யப்பெற்ற தொட்டிலை  இழந்தன.

     துயர மிகுதியால் நகர் தொழில் மறந்தபடியைச் சொன்னார்.
நெடு(மை) + இல் =நெட்டில்.                                   200

1806.ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென;
துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்
தளி துறந்தன பரி; தான யானையும்
களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே.

     உயிர்  துறந்தென - உயிர் போனார் போல;  முகம் -
எல்லோருடையமுகமும்;  ஒளி துறந்தன - ஒளி மழுங்கின;  முகில்
தொகையும் -
மேகக்கூட்டமும்;  துளி துறந்தன - மழைத் துளி
துளிர்த்தலைக் கைவிட்டன; பரி -குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன-
தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன;  தானயானையும் - மதப்
பெருக்கையுடைய  யானைகளும்;  மலர்க் கள் உண் வண்டின் - மலரில்
தேன் உண்ணும்  வண்டைப் போல;  களி துறந்தன -  களித்தலைக் கை
விட்டன.

     தளி - கூடம். வண்டுகள் தேன் உண்டால் களிக்கும். இங்கே
வண்டுகள் களிதுறந்தன என்றதால்இராமன் காடு ஏகும்  துயரத்தால்
மலர்களில் தேன் இல்லையாயிற்று.                               201