பக்கம் எண் :

310அயோத்தியா காண்டம்

யாவரும்  சூழ்ந்தனர் - அனைவரும் ஆலோசித்து;  ‘வீரன்முன் -
இராமனுக்கு முன்னே;  யாம் வனம் மேவுதும்’ - நாம் காட்டிற்குச்
செல்வோம்;  எனா -என்று;  போர் என்று ஒல்லொலி கைம்மிக -
‘போர்’ என்று ஒல்லென்ற ஒலி அளவு கடக்க;போயினார் - புறப்பட்டுச்
சென்றார்கள்.

     ‘போர்’ என்பது ஒலிக்குறிப்பு. ’போர்’ போல ஒலி மிகுதியாக எனலும்
ஆம். இராமனுக்குமுன்பே காடு செல்வதென முடிவு செய்தமையால்
அழுதலும் அவலித்தலும் இல்லை.                                231

இராமன் தாயரை வணங்கி மன்னனை ஆற்றக் கூறல்

1837.தாதை வாயில் குறுகினன் சார்தலும்,
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா,
‘ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்’ என்றான்;
மாதராரும் விழுந்து மயங்கினார்.

     கோதை வில்லவன் - மாலை அணிந்த வில்லை உடைய இராமன்;
தாதை -தந்தையது; வாயில் - மாளிகை வாயிலை; குறுகினன் சார்தலும்-
அணுகிச்சேர்ந்தவுடன்;  தாயரைக் கும்பிடா - உடன்வந்த தாய்மார்களை
வணங்கி;  ‘ஆதி மன்னனை - சக்கரவர்த்தியை;  நீர் ஆற்றுமின் -
நீங்கள் இங்கேயிருந்து தேற்றுங்கள்;’  என்றான் -;  மாதராரும் - அம்
மகளிரும்;  விழுந்து மயங்கினார் -தரையில் விழுந்து  மயங்கினார்கள்.

     ‘ஆதி மன்னன்’ சக்கரவர்த்தி தயரதன் - மூத்த முதல் அரசன்
ஆதலின். ‘ஆதி அரசன்’(1708) என்பது  காண்க. தயரதனைக் காணாமலே
கானகம்செல்வதாக வான்மீகம் சொல்லவில்லை; இதுகம்பர் மாற்றம்.    232

தாய்மார் ஆசிகூறல்  

1838.ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்-
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார்.

     நாத் தழும்ப - நா காய்ப்பு ஏறும்படி; அரற்றி - அழுது;
நடுங்குவார் - நடுங்கும் அத்தாயர்; தம் மகனை,  மருகியை - தம்
மகனாகிய இராமனையும்  மருகியாகியசீதையையும் ; இளையோனை -
இலக்குவனை;  வாழ்த்தினார் - வாழ்த்தினார்கள்; ஏத்தினார் -
புகழ்ந்தார்கள்; வழுத்தினார் - துதித்தார்கள்;  ‘காத்து நல்குமின்
தெய்வதங்காள்!’ -
காப்பாற்றிக் கொடுங்கள் தெய்வங்களே;’  என்றார்-.