1844. | அந்தியில் வெயில் ஒளி அழிய, வானகம், நந்தல் இல் கேகயன் பயந்த நங்கைதன், மந்தரை உரை எனும் கடுவின் மட்சிய சிந்தையின் இருண்டது, செம்மை நீங்கியே. |
வானகம் - ஆகாயம்; அந்தியில் - மாலைக் காலத்தில்; வெயில் ஒளி அழிய - சூரியனது ஒளி இல்லாமற் போக; நந்தல் இல் - கெடுதல் இல்லாத; கேகயன் பயந்த நங்கைதன் - கேகய நாட்டரசன் புதல்வியாகிய கைகேயியினுடைய; மந்தரை உரை எனும் கடுவின்- மந்தரைக் கூனியின் வார்த்தை என்னும் நஞ்சால்; மட்கிய -மங்கிப் போன (நிலை கெட்ட); சிந்தையின் - மனம் போல; செம்மை நீங்கி -செம்மைத் தன்மை போய்; இருண்டது - இருளடைந்தது. கூனி வார்த்தையால் நெறிகெட்ட கைகேயியின் இருளடைந்த மனம் போல வானம் செம்மைநீங்கி, ஒளி குன்றி இருளடைந்தது என்றார். அங்கே இருள் - வஞ்சனை, செம்மை - நேர்மை. வானத்தின் செம்மை செவ்வானத்தின் செம்மை - எனக் கொள்க. ‘ஏ’ காரம் ஈற்றசை. 5 1845. | பரந்து மீண் அரும்பிய பசலை வானகம், அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால், நிரந்தரம் இமைப்பு இலா நெடுங் கண் ஈண்டிய புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே. |
மீன் - நட்சத்திரங்கள்; பரந்து அரும்பிய - தோன்றி எங்கும் பரவியுள்ள; பசலை வானகம் - விளர்த்த ஆகாயம்; எங்கும் - எல்லாவிடத்தும்; அரந்தை இல் - துன்பம் இல்லாத; முனிவரன் அறைந்த சாபத்தால்- கோதமன் என்னும் முனிவன் கூறிய சாப மொழியால்; நிரந்தரம் - எப்பொழுதும்; இமைப்பு இலா நெடுங்கண் - இமைத்தல் இல்லாத பெரிய கண்கள்; ஈண்டிய -நெருங்கி அமைந்த; புரந்தரன் உரு என - இந்திரனது உடம்பைப் போல; பொலிந்தது- விளங்கியது. இந்திரன் சாபம் பெற்ற வரலாறு அகலிகைப் படலத்துக் கூறப் பெற்றது. வானம் இந்திரன்உடம்பு; விண்மீன்கள் இந்திரன் உடம்பில் உள்ள கண்கள் என உவமை காண்க. ‘ஏ’ஈற்றசை. 6 முனிவர்களோடு இராமன் தங்கல் 1846. | திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று, ஒரு விரை செறி சோலையை விரைவின் எய்தினான்; |
|