பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 329

குடிக்கு அரிய மகனை;  வனத்து  விட்டனன்” - காட்டிற்குச் செல்லுமாறு
அனுப்பினான்; என்றல் - என்று  உலகோரால் சொல்லப்படுதல்; மன்னவன்
தனக்கு -
அரசனுக்கு; அருந்தவம் - அருமையான தவமாகும்;  அது -
அம்மன்னவன் ஆணையை; தலைக்கொண்டு -சிரமேல் தாங்கி; ஏகுதல்-
வனம் செல்லுதல்;  எனக்கு அருந்தவம் - எனக்குஅரிய தவமாகும்; 
இதற்கு  நீ இரங்கல் - இதற்கு நீ இரங்காதே.

     அரிய மகனைக் காட்டிற்கு அனுப்புதல், அதுவும் அறத்தைக்
காப்பாற்ற வேண்டிய அனுப்புதல் என்பது செயற்கரும் தவம் ஆதலின், அது
‘மன்னவனுக்கு அருந்தவம்’ என்றான். அதனை மகன் நிறைவேற்றினால்
அன்றி அத் தவம் நிலை பெறாதாம். ஆகவே, அதன்படி நடந்து வனம்
செல்லுதல் எனக்குத் தவம் என்றான் இராமன். இருவர் தவத்தையும் கெடுக்க
எண்ணுதியோ என்பது குறிப்பு.                                   31

1871.‘முந்தினை முனிவனைக் குறுகி , முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறினை,
எந்தையை அவனொடும் எய்தி,“ ஈண்டு, என
சிந்தனை உணர்த்துதி” என்று, செப்புவான்.

     ‘முனிவனை - வசிட்டனை;  முந்தினை குறுகி - முற்பட்டுச் சென்று
அணுகி; முற்றும் - நிரம்பிய; என் வந்தனை முதலிய மாற்றம் கூறினை-
என் வணக்கம்முதலிய வார்த்தைகளைச் சொல்லி;  அவனொடும்
எந்தையை எய்தி -
அவ் வசிட்டமுனிவனொடும்  என் தந்தையை
அடைந்து;  ‘ஈண்டு - இங்கே;  என் சிந்தனை - என்மனக் கருத்தை;
உணர்த்துதி’ - தெரிவிப்பாய்;  என்று -; செப்புவான் -சொல்கின்றான்.

     முனிவனோடுதான் தயரதனிடம் போகவேன்டும் என்ற குறிப்பின் திறம்
உணர்க.                                                    32

1872.‘முனிவனை, எம்பியை, “முறையில் நின்று, அரும்
புனித வேதியர்க்கும், மேல் உறை புத்தேளிர்க்கும்,
இனியன இழைத்தி” என்று இயம்பி, “எற் பிரி
தனிமையும் தீர்த்தி” என்று உரைத்தி, தன்மையால்.

     முனிவனை - வசிட்ட முனிவகைக் கொண்டு;  ‘முறையில் நின்று -
நெறியில்நின்று;  அரும் புனித வேதியர்க்கும் - அருமையான தூய
அந்தணர்களுக்கும்; மேல் உறைபுத்தேளிர்க்கும்- மேல உலகில் வசிக்கும்
தேவர்களுக்கும்;  இனியன - நன்மையானசெயல்களை;  இழைத்தி’ -
செய்வாயாக;  என்று எம்பியை இயம்பி - என்று  என்தம்பி பரதனுக்குச்
சொல்லி;  ‘என் பிரி - என்னைப் பிரிதலால்