பக்கம் எண் :

342அயோத்தியா காண்டம்

 திருவின் நாயகனும், தென்பால்
     யோசனை இரண்டு போனான்;
அருவி பாய் கண்ணும், புண்ணாய்
     அழிகின்ற மனமும், தானும்,
துரித மான் தேரில் போனான்
     செய்தது சொல்லலுற்றாம்.

     பரிதி வானவனும் - சூரிய தேவனும்; கீழ்பால் பருவரை - கிழக்கே
உள்ளஉதயமலையில்; பற்ற முன்னம் - பற்றித் தோன்றும் முன்னர்;
திருவின் நாயகனும் -திருமகள் கேள்வானாகிய இராமனும்; தென்பால் -
தெற்கே; இரண்டு யோசனை போனான்- இரண்டு யோசனை அளவுள்ள
தூரம் சென்றான்; அருவி பாய் கண்ணும் - அருவி போலக்கண்ணீர்
வழிகின்ற கண்ணும்; புண்ணாய் அழிகின்ற மனமும் - புண்பட்டு
வருந்துகின்ற  மனமும்;  தானும் - தானுமாகி;  துரித மான் தேரில் -
வேகமான குதிரைகள் பூட்டியதேரில்;  போனான் - சென்ற சுமந்திரன்;
செய்தது - செய்த செயல்களை;  செப்பலுற்றாம் - (இனிச்) சொல்லத்
தொடங்கினோம்.

    யோசனை என்பது நீட்டல் அளவைப் பெயர். துரிதம் - வேகம்.   53

சுமந்திரன் வசிட்டனை காணுதல்  

1893.கடிகை ஓர் இரண்டு மூன்றில்,
     கடி மதில் அயோத்தி கண்டான்;
அடி இணை தொழுதான், ஆதி
     முனிவனை; அவனும், உற்ற
படி எல்லாம் கேட்டு, நெஞ்சில்
     பருவரல் உழந்தான்; முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான், ‘அந்தோ!
     முடிந்தனன், மன்னன்’ என்றான்.

     கடிகை ஓர் இரண்டு மூன்றில் - ஐந்து  நாழிகைப் போதில்;
கடிமதில்அயோத்தி கண்டான் - காப்பமைந்த மதிலையுடைய அயோத்தி
நகரத்தை அடைந்து;  ஆதிமுனிவனை - வசிட்டனை; அடி இணை
தொழுதான் -
பாதத்தில் வணங்கினான்;  அவனும்- வசிட்ட முனிவனும்;
உற்றபடி எலாம் கேட்டு - வனத்தில் நடந்தவையெல்லாம்கேட்டறிந்து;
நெஞ்சில் பருவரல் உழந்தான் - மனத்தில் துக்கம் கொண்டு வருந்தி;
முன்னே முடிவு எலாம் உணர்ந்தான் - இனி வரப் போவதை எல்லாம்
உணர்ந்தவனாய்;  ‘அந்தோ முடிந்தனன் மன்னன்’ என்றான் - ஐயோ!
அரசன் இறந்து போனான் என்றான்.