பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 343

     இராமன் திரும்பாமல் வனம் சென்றுவிட்டான் என்ற செய்தியைச்
சுமந்திரன் மூலம் அறிந்த வசிட்டன் ‘இனி அரசன் இறந்து போவது உறுதி’
என்கின்ற கருத்தில்‘முடிந்தனன் மன்னன்’ என்றான். ‘தெளிவின்கண்
எதிர்காலம் இறந்தகாலம் ஆயிற்று; காலவழுவமைதி. ஐந்து நாழிகை இரண்டு
மணி.  கடிகை - நாழிகை.                                       54

வசிட்டன் சுமந்திரனோடு தயரதனை அடைதல்  

1894.‘நின்று உயர் பழியை அஞ்சி
     நேர்ந்திலன் தடுக்க, வள்ளல்;
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான்,
     தருமத்திற்கு உறுதி பார்ப்பான்;
வென்றவர் உளரோ மேலை
     விதியினை?’ என்று விம்மிப்
பொன் திணி மன்னன் கோயில்
     சுமந்திரனோடும் போனான்.

     ‘வள்ளல் - தசரதன;  நின்று உயர் பழியை அஞ்சி - உலகத்தில்
நிலைத்துநின்று மேன்மேல் வரும் பழிக்குப் பயந்து; தடுக்க நேர்ந்திலன்-
இராமன் காடுசெல்வதைத் தடுக்க உடன்பட்டானில்லை;  தருமத்திற்கு
உறுதி பார்ப்பான் -
தருமம்நிலைபெறும் தன்மையை எப்பொழுதும்
நாடுபவனாகிய இராமன்; நான் உரைத்தல் ஒன்றும்நோக்கான் - (வனம்
போக வேண்டாம் என்று) நான் சொல்லியது  ஒரு வார்த்தையும் கருதான்
ஆயினன்;  மேலை விதியினை வென்றவர் உளரோ?’ - பழைய
வினையை வெற்றி கொண்டவர் யாராவது  இருக்கிறார்களா?;’ என்று
விம்மி -
என்று புலம்பிக்கொண்டு; சுமந்திரனோடும்-; மன்னன் பொன்
திணி கோயில் -
தசரதனது  பொன்னாற் செய்தஅரண்மனைக்குள்;
போனான்  -.

     வசிட்டன் உரைத்தது  ‘ஐய!  நீ ஒரு ஓங்கிய,  கல்தடம் காணுதி
என்னின், கண் அகல் மல் தடந்தானையான் வாழ்கிலான்’ என்பது  (1766).
நகர் நீங்குபடலம்160 ஆம் பாடலும் (1764.) இதனுடன் கருதத்தக்கதாகும். 55

1895.‘தேர் கொண்டு வள்ளல் வந்தான்’
     என்று தம் சிந்தை உந்த,
ஊர் கொண்ட திங்கள் என்ன
     மன்னனை உழையர் சுற்றிக்
கார்கொண்ட மேனியானைக்
     கண்டிலர்; கண்ணில், வற்றா
நீர்கொண்ட நெடுந் தேர்ப் பாகன்
     நிலை கண்டே, நிலையின் தீர்ந்தார்.