பக்கம் எண் :

354அயோத்தியா காண்டம்

தேவர் உலகில்; அப்புறத்தில் - வேறு இடங்களில்; விளங்கும் மாதர் -
கற்புடன் விளங்குகின்ற  மாதர்கள்; ‘இவரின் கற்பினார்  யாரோ! என -
இவர்களைக்காட்டிலும் கற்பிற் சிறந்தவர் யார் உளரோ என்னும்படி; 
நின்றார் - (அத்தேவிமார்)நின்றார்கள்; களங்கம் நீத்த மதிமுகத்தார் -
களங்கம் இல்லாத மதிபோன்ற முகத்தைஉடையவர்களாய அத்தேவிமார்;  கான வெள்ளம் கால் கோப்ப- காட்டு நீர்ப் பெருக்கு தன் அடியைச் சூழ
உள்ள; துளங்கல் இல்லாத் தனிக் குன்றில் - சிறிதும் அசைந்து
கொடுக்காத பெரிய மலையில்; தொக்க மயிலின் - சேர்ந்து இருந்த மயில்
கூட்டத்தைப்போல;  சூழ்ந்திருந்தார் - அவ் அரண்மனையில்
திரண்டிருந்தனர்.

     அடியில் நீர் சூழ மலையில் மயில் திரண்டது போல் என
உவமைக்காண்க. கண்ணீர் வெள்ளம்சூழ அரண்மனையில் தேவிமார்
எனஉவமைக் கேற்பக் கொள்ளலாம். இனி கான வெள்ளம் என்பதற்கு
அவரது அழகுரவோசையாகிய வெள்ளம் என்பாரும் உளர்; பொருந்துமேற்
கொள்க.                                                      71

1911.கைத்த சொல்லால் உயிர் இழந்தும்,
     புதல்வற் பிரிந்தும், கடை ஓட
மெய்த்த வேந்தன் திரு உடம்பைப்
     பிரியார் பற்றி விட்டிலரால்;
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும்
     பிறவிப் பெரிய கடல் கடக்க.
உய்த்து மீண்ட நாவாயில்,
     தாமும் போவார் ஒக்கின்றார்.

     புதல்வன் பிரிந்தும் - மகனைப் பிரிந்தும்; கைத்த சொல்லால்
உயிர்இழந்தும் -
மனம் வெறுக்கத் தக்க (கைகேயி கூறிய) கொடிய
சொல்லால் தன் உயிரே நீங்கப்பெற்றும்;  கடை ஒட - இறுதிவரையிலும்;
மெய்த்த வேந்தன் - மெய்யையே பற்றிநின்ற தசரத மன்னனுடைய;
திருவுடம்பை - திருமேனியை; பற்றிப் பிரியார் விட்டிலர்- பிடித்துக்
கொண்டு பிரியாதவர்களாய் விடாதவர்களாய் உள்ள தேவிமார்;  பித்த
மயக்கு ஆம் சுறவு எறியும் -
பித்துக் கொள்வதற்குத் காரணமாய
அவிச்சை என்னும் சுறா மீன்துள்ளிச் சஞ்சரிக்கும்;  பிறவிப் பெரிய கடல்
கடக்க -
பிறவி என்னும் பெரியகடலைத் தாண்டுதற்கு; உய்த்து  மீண்ட
நாவாயில் -
(முன்பு ஒருவரை) அக்கரை செலுத்தித்திரும்பி வந்த
மரக்கலத்திலே; தாமும் போவார் ஒக்கின்றார் - தாமும் போக
இருக்கின்றவர்களை ஒத்திருந்தார்கள்.

     பிரிதற்கரிய மகன் பிரிந்தாலும்,  உயிரே,  பிரிந்தாலும்  இறுதிவரை
சத்தியத்தைவிடாமல் நின்றவன் தயரதன் என்றார். பித்த மயக்கு - மண்,
பெண்,  பொன் என்னும்மூவாசைகளை உண்டாக்குகின்ற அவிச்சை,
அவிச்சை என ஒன்றைமட்டும் குறித்தாலும் அவிச்சை,அகங்காரம்,  அவா,
விழைவு,  வெறுப்பு  என்னும்