பக்கம் எண் :

362அயோத்தியா காண்டம்

வாள் எயிற்றின்வழி ஆன கடுவுக்கு-வாயில் உள்ள தீய வளைந்த சிறந்த
விடப்பல்லின் ஆக வரும் விடத்துக்கு;  அரு மருந்தா -அரிய மருந்தாக;
அருந்தும் அமுதம் பெற்று  உய்ந்து - உண்ணக்கூடிய சாவா மருந்தைப்
பெற்று  உயிர் பிழைத்து; போன பொழுதில்- வெளியே போன உடனேயே;
புகுந்த உயிர்- திரும்ப உள்ளே  வந்து  புகுந்த  உயிரை;  பொருத்தார்
ஒத்தார் -
தாங்கியவர்களைப்  போன்றார்கள்.

     பாம்பினாற் கடியுண்ட  உடனே வெளியேறிய உயிர் அமுதம் பெற்று
உய்ந்து மீண்டும் உள்ளேபுகுந்தாற் போல முதல்நாள் இரவில்
சோர்ந்திருந்த நகரினர் காலையே தேரின் சுவடு கண்டுஅயோத்தி நகர்
நோக்கி மகிழ்ந்தபடி.  உள்ளது என்றார். அமுதம் - சாவாமருந்து.       82

1922.ஆறு செல்லச் செல்ல, தேர் ஆழி
     கண்டார், அயற்பால
வேறு சென்ற நெறி காணார்;
     விம்மாநின்ற உவகையராய்,
மாறி உலகம் வகுத்த நாள்
     வரம்பு கடந்து மண் முழுதும்
ஏறி ஓடுங்கும் எறிகடல்போல்,
     எயில் மா நகரம் எய்தினார்.

     ஆறு செல்லச் செல்ல - வழி நடந்து போகப் போக;  தேர் ஆழி
கண்டார் -
தேர்ச் சக்கரத்தை (சுவட்டை)ப்  பார்த்து;  அயற்பால  வேறு
சென்ற நெறி காணார் -
பக்கத்தில் வேறாகச் சென்ற வழிகள் (சுவடுகள்)
எதுவும் காணாது; விம்மாநின்ற - மேலும்மேலும் தளும்புகின்ற; 
உவகையராய் - மகிழ்ச்சியோடு;  மாறி உலகம் வகுத்த நாள் -பிரளயம்
நீங்கி மீண்டும் படைப்பு நிகழ்ந்த காலத்தில்; வரம்பு கடந்து மண்முழுதும்
ஏறி-
எல்லை கடந்து  பூமி முழுவதும் மூடி மேல் சென்று (பிறகு);
ஒடுங்கும் எறிகடல் போல் -தன் எல்லைக்குள் ஒடுங்கி அடங்குகின்ற
அலைவீசும் கடலைப் போல; எயில் மாநகரம்எய்தினார் - மதிலாற்
சூழப் பெற்ற அயோத்தி என்னும் பெரிய நகரத்தை அடைந்தார்கள்.

     பெருந்திரளாகக் காடு சென்று மீண்டும் நகர் திரும்பிய மக்கள்
வெள்ளத்துக்கு ‘ஏறிஒடுங்கி அடங்கும் கடல்’ உவமையாம். உவமையணி. 83

உண்மை உணர்ந்த நகரினர் வருத்தத்தை வசிட்டன் ஆற்றுதல்  

1923. புக்கார், ‘அரசன் பொன்னுலகம்
     போனான்’ என்னும் பொருள் கேட்டார்;
உக்கார், நெஞ்சம்; உயிர் உகுத்தார்;
     உற்றது எம்மால் உரைப்ப அரிதால்;