வாள் எயிற்றின்வழி ஆன கடுவுக்கு-வாயில் உள்ள தீய வளைந்த சிறந்த விடப்பல்லின் ஆக வரும் விடத்துக்கு; அரு மருந்தா -அரிய மருந்தாக; அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து - உண்ணக்கூடிய சாவா மருந்தைப் பெற்று உயிர் பிழைத்து; போன பொழுதில்- வெளியே போன உடனேயே; புகுந்த உயிர்- திரும்ப உள்ளே வந்து புகுந்த உயிரை; பொருத்தார் ஒத்தார் -தாங்கியவர்களைப் போன்றார்கள். பாம்பினாற் கடியுண்ட உடனே வெளியேறிய உயிர் அமுதம் பெற்று உய்ந்து மீண்டும் உள்ளேபுகுந்தாற் போல முதல்நாள் இரவில் சோர்ந்திருந்த நகரினர் காலையே தேரின் சுவடு கண்டுஅயோத்தி நகர் நோக்கி மகிழ்ந்தபடி. உள்ளது என்றார். அமுதம் - சாவாமருந்து. 82 1922. | ஆறு செல்லச் செல்ல, தேர் ஆழி கண்டார், அயற்பால வேறு சென்ற நெறி காணார்; விம்மாநின்ற உவகையராய், மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் ஏறி ஓடுங்கும் எறிகடல்போல், எயில் மா நகரம் எய்தினார். |
ஆறு செல்லச் செல்ல - வழி நடந்து போகப் போக; தேர் ஆழி கண்டார் - தேர்ச் சக்கரத்தை (சுவட்டை)ப் பார்த்து; அயற்பால வேறு சென்ற நெறி காணார் - பக்கத்தில் வேறாகச் சென்ற வழிகள் (சுவடுகள்) எதுவும் காணாது; விம்மாநின்ற - மேலும்மேலும் தளும்புகின்ற; உவகையராய் - மகிழ்ச்சியோடு; மாறி உலகம் வகுத்த நாள் -பிரளயம் நீங்கி மீண்டும் படைப்பு நிகழ்ந்த காலத்தில்; வரம்பு கடந்து மண்முழுதும் ஏறி- எல்லை கடந்து பூமி முழுவதும் மூடி மேல் சென்று (பிறகு); ஒடுங்கும் எறிகடல் போல் -தன் எல்லைக்குள் ஒடுங்கி அடங்குகின்ற அலைவீசும் கடலைப் போல; எயில் மாநகரம்எய்தினார் - மதிலாற் சூழப் பெற்ற அயோத்தி என்னும் பெரிய நகரத்தை அடைந்தார்கள். பெருந்திரளாகக் காடு சென்று மீண்டும் நகர் திரும்பிய மக்கள் வெள்ளத்துக்கு ‘ஏறிஒடுங்கி அடங்கும் கடல்’ உவமையாம். உவமையணி. 83 உண்மை உணர்ந்த நகரினர் வருத்தத்தை வசிட்டன் ஆற்றுதல் 1923. | புக்கார், ‘அரசன் பொன்னுலகம் போனான்’ என்னும் பொருள் கேட்டார்; உக்கார், நெஞ்சம்; உயிர் உகுத்தார்; உற்றது எம்மால் உரைப்ப அரிதால்; |
|