பக்கம் எண் :

368அயோத்தியா காண்டம்

1929.மா கந்தமும், மகரந்தமும், அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான்,
மேகம் தனி வருகின்றது மின்னொடு என, மிளிர் பூண்
நாகம் தனி வருகின்றது பிடியோடு என, நடவா.

     மா கந்தமும் - மிக்க நறுமணத்தையும்;  மகரந்தமும் - வாசனைப்
பொடியும் கலந்து பொருந்திய; அளகம் - கூந்தல்;  தரும் - பெற்ற;
மதியின் பாகம்தரும்  நுதலாளொடு - அரைச்சந்திரன் வடிவாயமைந்து
நெற்றியை உடைய சீதையோடு; பவளம்தரும் இதழான் - பவளத்துக்குச்
செம்மை தரும் திரு அதரத்தை உடைய இராமன்; மேகம்மின்னொடு தனி
வருகின்றது என்ன -
மேகம் மின்னலோடு சேர்ந்து தனித்து வருகின்றது
போலவும்; மிளிர் பூண் - அழகிய அணி அணிந்த; நாகம் - ஆண்யானை;
பிடியோடு தனி வருகின்றது என்ன - பெண் யானையோடு தனித்து
வருகின்றது போலவும்; நடவா -நடந்து  சென்று.

     நறுமணப் பொடிகளையும் மலர்களில் உள்ள மகரந்தங்களையும்
கூந்தலுக்கு இட்டு மணம் ஊட்டல்வழக்கு. கூந்தலின் கீழ் உள்ள நெற்றியை
‘அளகம் தரும் மதியின் பாகம்’ என்றார். குளகச்செய்யுள்.              4

1930.தொளை கட்டிய கிளை முட்டிய
     சுருதிச் சுவை அமுதின்,
கிளை கட்டிய கருவிக் கிளர்
     இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழு
     கிளவிக் கிளி விழிபோல்,
களை கட்டவர் தளை விட்டு எறி
     குவளைத் தொகை கண்டான்.

     தொளை கட்டிய கிளை- தொளை பொருந்திய புல்லாங்குழலிலிருந்து;
முட்டிய -தாக்கி எழுப்பிய;  சுருதி - காதால் கேட்டு அனுபவிக்கும்
தன்மையதான;  சுவை அமுதின்- சுவையுடைய இசை அமுதம் போலவும்;
கிளை கட்டிய கருவி - நரம்புகள் இணைத்துக்கட்டப்பெற்ற யாழிலிருந்து;
கிளர் இசையின் - உண்டாகின்ற இசையைப் போலவும்; பசை நறவின் -
சாரமுள்ள தேனைப் போலவும்; விளை கட்டியின் - நன்றாக விளைந்த
பாகுக் கட்டி போலவும்;  மதுரித்து எழு - இனிமை உடையதாகி எழுகின்ற;
கிளவி -பேச்சினை உடைய; கிளி - கிளி போல்பவளாகிய சீதையினது;
விழி போல் -
கண்களைப் போல; களை கட்டவர் - களை பறிப்பவர்;
தளைவிட்டு எறி -வயலிலிருந்து வீசி எறிகின்ற;  குவளைத் தொகை
கண்டான் -
குவளை மலர்களின்கூட்டத்தைப் பார்த்தான்.