பக்கம் எண் :

4அயோத்தியா காண்டம்

தயரதன் மந்திராலோசனை மண்டபத்தை அடைதல்  

கலிவிருத்தம்

1314.மண்ணுறு முரசுஇனம் மழையின் ஆர்ப்புற,
பண்ணுறு படர் சினப் பரும யானையான்,
கண்ணுறு கவரியின் கற்றை சுற்றுற,
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான்.

     பண்உறு படர்சினம் பரும யானையான் - ஒப்பனை செய்யப்பட்ட
மிக்கசீற்றத்தையும் கழுத்து மெத்தையையும் உடைய பட்டத்து
யானையையுடைய தசரதன் ;  மண்உறுமுரசு இனம் - மார்ச்சனை
அமைந்த முரசங்களின் தொகுதி  ;  மழையின் ஆர்ப்பு உற-
மேகங்களைப் போல முழங்கவும் ;  கண் உறு கவரியின் கற்றை -
காண்பவர்கண்ணில் அழகினால் நிற்கும் கவரிமானின் மயிர்க் கற்றையால்
அமைந்த சாமரை; சுற்று உற - சூழ்ந்து வரவும்; எண் உறு சூழ்ச்சியின்
இருக்கை
-ஆராய்வதற்குப் பொருத்தமாகிய மந்திராலோசனை
மண்டபத்தை;  எய்தினான் - அடைந்தான்.

     கவரி - சமரம் என்னும் மானின் வால் மயிரைக் கொண்டு
செய்யப்பட்டஅரச அடையாளங்களுள் ஒன்று. பருமம் - யானைமேல்
அரசர் இருத்தற்கு அமைக்கப்படும் இருக்கை.இதனைக் கலனை என்றும்
கல்லணை என்றும் கூறுவர். மண் - மார்ச்சனை. கண்உறு என்பதற்கு
விளக்கம்பொருந்திய என்றும் பொருள் கூறலாம்.                     1

மந்திரக் கிழவரை வருவித்தல்  

1315.புக்கபின், ‘நிருபரும், பொரு இல் சுற்றமும்,
பக்கமும், பெயர்க’ என, பரிவின் நீக்கினான்,
ஒக்க நின்று உலகு அளித்து, யோகின் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான்.

     புக்க பின் - தசரதன் மந்திராலோசனை மண்டபத்தில் புகுந்த
பிறகு ; நிருபரும் - மன்னர்களும் ; பொருவு இல் சுற்றமும் - நிகரற்ற
உறவினர்களும் ;  பக்கமும் - தன் அன்பிற்குரிய நண்பர்களும் ; பெயர்க
என
- இவ்விடத்தை விட்டு அகல்க என்று சொல்லி; பரிவின் நீக்கினான்-
அவர்களை அன்புடன் நீங்குமாறு செய்து; ஒக்க நின்று உலகு அளித்து-
பின்பு அவன் யாவரிடமும் சமமாக நின்று உலகத்தைக் காத்து ;  யோகின்
எய்திய சக்கரத்தவன் என -
அறிதுயிலை அடைந்த சக்கரம் ஏந்திய
திருமாலைப் போல ;  தமியன் ஆயினான் - தனித்தவன் ஆயினான்.