பக்கம் எண் :

குகப் படலம் 403

     சாந்து அணி - சந்தனம் அணிந்த; புளினத்தின் தடமுலை- மணல்
மேடுகளாகிய பெரிய முலைகளை உடைய;  உயர் கங்கை - உயர்ந்த
கங்கையானவள்; காந்துஇன மணி மின்ன - எரிகின்ற கூட்டமான
இரத்தினங்கள் விட்டு விளங்க;  கடி கமழ்கமலத்தின் - மணம் வீசுகின்ற
தாமரை மலரினால்;  சேந்து ஒளி விரியும் -சிவந்து  ஒளி பரவுகின்ற;
தெண் திரை எனும் நிமிர் கையால் - தெளிந்த அலைகள் என்று
கூறப்படும் நீண்ட கைகளால்; ஒரு தானே ஏந்தினள் - தான் ஒருத்தியே
அந்த ஓடத்தைச்சுமந்தவளாய்; இனிது அப்பால் ஏற்றினள் -
இனிமையாக அக்கரையில் கொண்டுசேர்த்தாள்.

     புளினம் - மணல் திட்டு. நதிகளுக்கு இடையில் உள்ளவை.
மணற்குன்று எனலும் ஆம். அவற்றைநகில்களாக்கிக் கங்கையைப் பெண்
ஆக்கினார். நீரலைகளின் மேல் நாவாய் செல்வது கங்கைதான் சுமந்து
அக்கரை கொண்டு சேர்ப்பதுபோல் உள்ளது  என்றது  தற்குறிப்பேற்றம்.
அலையைக்கையாக்கியதற்கு ஏற்பக் ‘கடிகமழ் கலத்தின் சேந்து ஒளிவிரியும்’
என்றார்.                                                     36

சித்திர கூடத்திற்குச் செல்லும் வழியைக் குகனிடம் இராமன் வினாவல்  

1989.அத் திசை உற்று, ஐயன்,
     அன்பனை முகம் நோக்கி,
‘சித்திர கூடத்தின்
     செல் நெறி பகர் என்ன,
பத்தியின் உயிர் ஈயும்
     பரிவினன் அடி தாழா,
‘உத்தம! அடி நாயேன்,
     ஓதுவது உளது’ என்றான்.

     ஐயன் - இராமன்; அத்திசை உற்று - கங்கையின் அக்கரையை
அடைந்து; அன்பனை முகம் நோக்கி - குகனைப் பார்த்து; ‘சித்திர
கூடத்தின் செல் நெறி பகர்’என்ன -
சித்திரகூடத்திற்குச் செல்லும்
வழியைக் கூறுக என்று கேட்க;  (குகனும்) பத்தியின் உயிர் ஈயும்
பரிவினன்
- இராம பக்தியால் தன்னுயிரையும் இராமனுக்கு ஈநதுவிடும்
அன்புடையனாகி; அடி தாழா - இராமன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி;
‘உத்தம! அடிநாயேன் ஓதுவது உளது’ என்றான் - எல்லோரிலும்
மேம்பட்டவனே! நாய்போல் கடைப்பட்டஅடிமையாகிய யான் சொல்லுவது
உளது’ என்று சொன்னான்.

     “ஆணல்லன் பெண்ணல்லன்” என்னும் திருவாய்மொழியில் ‘இவன்
உலகத்துக் காணும் ஆண்களுள்ஒருவன் அல்லன்; புருஷோத்தமன்
என்பதாயிற்று’ என்னும் ஈட்டுரையை இங்குக் கருதுக. (திவ்ய.3062)
தன்னைத் தாழ நினைத்துக் கூறுவார் நாயை உவமையாக் கோடல் வழக்கு.
குகன் பலஇடங்களிலும் தன்னை ‘நாய்’ எனக் கூறல் காண்க.          37