‘உம்பி - உன் தம்பியாகிய பரதன்; அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன்- அயோத்தியில் உள்ள குடிமக்களையும் சுற்றத்தையும் காப்பாற்ற வேண்டி அதற்குரியஆட்சிக் குணங்களோடு இருக்கின்றான்; (நீ என்னுடன் வந்துவிட்டால்) இங்கு உள கிளை காவற்குயார் உளர்? உரை செய்யாய் - சிருங்கிபேரத்தில் உள்ள சுற்றத்தையும் குடிகளையும் காப்பாற்ற யார் இருக்கின்றார்கள், சொல்வாயாக; (நீயும் நானும் ஒன்றான பிறகு) உன்கிளை எனது அன்றோ - உன்னுடைய சுற்றம் என் சுற்றம் அல்லவா?; உறு துயர் உறர் ஆமோ?- மிக்க துன்பத்தை என் பிரிவால் எய்தலாமோ; என் கிளை இது என் ஏவலின் இனிது கா’- என்னுடைய சுற்றமாகிய இவ்வேடுவர்களை என் கட்டளையால் இனிது காப்பாயாக;’ என்றான் -. உன் ஏவலின் நான் இருக்கின்றேன் என்று கூறிய இராமன் அதனையும் மனம் கொள்ளாது குகன்படும் அவதி கண்டு, ‘நானே தலைவன் நீ என் ஏவல் வழி என் சுற்றமாகிய இவ்வேடுவர்களைக் காப்பாற்றி ஆட்சி செய்து இங்கே தங்குவாயாக’ என்றான்; அவன் மறுக்கமாட்டாமைக்கு எடுத்துக்காட்டாகப் பரதனைக் கூறினான். 45 குகன் விடைபெற்றுச் செல்ல மூவரும் வனத்துள் மேலும் செல்லல் 1998. | பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான், பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்; அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார். |
பணி மொழி கடவாதான் - இராமன் இட்ட கட்டளை வார்த்தையை மீறாது; பருவரல்இகவாதான் - இராமனது பிரிவினால் ஏற்பட்ட துன்பமும் நீங்காது; பிணி உடையவன்என்னும் பிரிவினன் - நோயுற்றான் என்று சொல்லும்படியான பிரிவுத் துன்பத்தை உடையனாய்;விடை கொண்டான்- (குகன்) உத்தரவு பெற்றுச் சென்றான்; அணி இழை மயிலோடும்ஐயனும் இளையோனும்- அழகிய ஆபரணங்களை அணிந்த மயில் போல்பவளாகிய சீதையோடும்இராமனும் தம்பி இலக்குவனும்; திணி மரம் நிறை கானில்- வலிய பெரு மரங்கள்நிறைந்துள்ள காட்டில்; சேண் உறு நெறி - நெடுந் தொலையான வழியில்; சென்றார்- சென்றார்கள். இராமன் ஆணையை மீறாமல் துன்பத்தைத் தாங்கிக் குகன்செல்ல, மூவரும் காட்டில் நெடுந்தொலை சென்றனர். காட்டின் உள்ளே செல்லச் செல்லப்பெருமரங்கள் செறிந்திருக்கும் ஆதலின் ‘திணி மரம் நிறை கானில்’ எனவே, காட்டின் உள்பகுதியில் செல்வாராயினர் என்பது அறியப்படும். 46 |