பக்கம் எண் :

வனம் புகு படலம் 413

வெட்கமுற்றனவாய்;  தொகுபீலி - சுருக்கிக் கொண்ட தம் தோகை களை;
கோலின -விரித்து  வளைத்தனவாய்;  நடம் ஆடல் - நடனம் ஆடுதல்;
நின சாயல் பொலிவது -உன்னுடைய சாயல் தம்மிடத்தே விளங்குவதை;
பல கண்ணில் - தம்முடைய தோகையில் உள்ளபல கண்களால்; காணிய-
காண்பதற்கு;  எனல் ஆகும் - என்று சொல்லாம்படியுள்ள; இவை - இக்
காட்சிகளை;  காணாய்  -.

     தோகை சுருங்கி இருக்குங்கால் அதில் உள்ள கண்கள் வெளித்
தோன்றா;  விரித்தவழிகண்கள் தோன்றும் ஆதலின்,  ஆடும் மயில் தம்
தோகைக் கண்களால் பிராட்டியின் சாயல்தம்மிடத்தே
பொருந்தியுள்ளமையைப் பார்ப்பது  போலும் என்று கூறினார்.           4

2003.‘சேந்து ஒளி விரி செவ் வாய்ப்
     பைங் கிளி, செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக்
     கோதுவ, - கவின் ஆரும்
மாந் தளிர் நறு மேனி
     மங்கை! - நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும்
     இயல்பின; இவை காணாய்!

     கவின் ஆரும்- அழகு பொருந்திய; மாந்தளிர் நறுமேனி மங்கை-
மாந்தளிர் போன்ற மணமும் நிறமும் கூடிய மேனியை உடைய சீதையே!;
சேந்து  ஒளி விரி - சிவந்து  ஒளி விரிக்கின்ற;  செவ்வாய் - சிவந்த
வாயினை உடைய;  பைங்கிளி -பசிய கிளி;  கோலம் செறி - அழகு
பொருந்திய;  காந்தளின் மலர் ஏறிக் கோதுவ -காந்தள் மலரின்மேல்
ஏறி அம் மலரைக் கோதுகின்றவை;  நின் மணி முன்கை ஏந்தின எனல்
ஆகும் இயல்பின -
நின்னுடைய அழகிய முன்கையில் ஏந்திக்
கொண்டிருக்கின்றதாகச்சொல்லப்பெறும் இயல்பினை உடைய; இவை -
இக் காட்சிகளை; காணாய் -.

     காந்தள் மலர் மகளிர் கைபோலும் ஆதலின் அம்மலர்மேல் ஏறி அம்
மலரைக் கோதுகின்றகிளி, பிராட்டியின் முன் கைமேல் ஏறி அமர்ந்துள்ளது
போல் காட்சி அளிப்பதாயிற்று.                                    5

2004.‘நெய்ஞ் ஞிறை நெடு வேலின்
     நிறம் உறு திறம் முற்றிக்
கைஞ் ஞிறை நிமிர், கண்ணாய்! -
     கருதின இனம் என்றே
மெய்ஞ் ஞிறை விரி சாயல்
     கண்டு, நின் விழி கண்டு,