பக்கம் எண் :

வனம் புகு படலம் 433

 காலை வேலையைக் கடந்தது,
     கழிந்த நீர் கடிதின்;
மேலை வேலையில் பாய்ந்தது,
     மீண்ட நீர் வெள்ளம்.

     ஆலை பாய் வயல் - கரும்பாலையிலிருந்து கருப்பஞ்சாறு பாய்கின்ற
வயல்களை உடைய;அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் -
அயோத்திநகரத்தில் உள்ளார்க்கு ஆண்களிற்சிறந்தவனாகிய இராமனுக்குத்
தம்பியாய இலக்குவன்;  மாலை மால்வரைத் தோள் எனும் மந்தரம்
திரிய
- மாலை அணிந்த பெரிய மலை போன்ற தோளாகிய
மந்தரமலையானது மாறி மாறிநீரைத்தள்ள;  கழிந்த நீர் - கையால்
தள்ளப்பட்ட நீரானது;  காலை வேலையைக்கடிதின் கடந்தது - சூரியன்
உதிக்கும் காலைக் கடலாகிய கீழ்க்கடலை விரைவாகக் கடந்து அப்பால்
சென்றது; மீண்ட நீர் வெள்ளம் - தெப்பத்தால் மீண்டுசென்ற
நீர்ப்பெருக்கு;கடிதின் மேலை வேலையின் பாய்ந்தது - விரைவாக
மேற்குத் திசையில் உள்ள கடலிற்பாய்ந்து  சென்றது.

     கையால் தள்ளிய நீர் கீழ்க்கடலைக் கடக்க,  தெப்பத்தால் விடுபட்ட
நீர் மேற் கடலைஅடைந்தது என்றவாறாம். ‘கடிதின்’ என்பதனை
இரண்டுக்கும் கூட்டுக.                                         37

பின்னர் ஒரு பாலை நிலத்தை அடைதல்  

2036. அனையர், அப் புனல் ஏறினர்;
     அக்கரை அணைந்தார்;
புனையும் வற்கலைப் பொற்பினர்
     நெடு நெறி போனார்;
சினையும் மூலமும் முகடும்
     வெந்து, இரு நிலம் தீய்ந்து,
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர்
     நெடுஞ் சுரம் நேர்ந்தார்.

     புனையும் வற்கலைப் பொற்பினர் - அணிந்து. கொண்டுள்ள
மரவுரியாலாகிய அழகியஆடையுடைய அவர்கள்; அனையர் -
அப்படிப்பட்டவர்களாய்; ஆப்புனல் ஏறினர் -அந்த யமுனை நீரைக்
கடந்தார்; அக்கரை அணைந்தார் - எதிர்க்கரையைச்சென்றடைந்தார்கள்;
நெடு நெறி போனார் - நீண்ட வழியைக் கடந்து சென்று;  சினையும்
மூலமும் முகடும் வெந்து -
கிளைகளும் வேறும், உச்சியும் தீய்ந்து;  இரு
நிலம்தீய்ந்து -
பெரிய நிலம் கருகி; நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர்
நெடுஞ் சுரம் -
நினைக்கின்ற மனமும் சுடுவதாகிய ஒரு பெரிய பாலை
நிலத்தை;  தேர்ந்தார் -அடைந்தார்கள்.