பக்கம் எண் :

438அயோத்தியா காண்டம்

மரங்கள்;  முருந்தம் - மயிலிறகின் அடிபோல;  நின்று அரும்பின -
அரும்புகளைத்தந்தன.

     முருந்து - மயிலிறகின் அடி.  அது  குருந்த மரத்து  அரும்புக்கு
உவமை. பயிரும் என்றிருத்தல் சிறப்பு; சங்க நூல்களில் இதுவே சொல்.  45

2044.பந்த ஞாட்புறு பாசறை,
     பொருள்வயின், பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத்
     தழுவினர், பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின்
     கொதிப்பது -அக் கழலோர்
வந்த போது, அவர் மனம் எனக்
     குளிர்ந்தது - அவ் வனமே!

     அவ்வனம் - அந்தக் காடு; பந்த ஞாட்பு உறு - பிணிப்புடைய
போர்க்களத்தில் பொருந்திய; பாசறை - பாசறைக் கண்ணும்;  பொருள்
வயின் -
பொருளைத் தேடும் இடத்தும்; பருவம் தந்த - பிரிந்து  சென்று
‘இன்ன காலத்தில்வருவேன்’ என்று காலம் குறித்துச் சென்ற; கேள்வரை -
தம் கணவரை; உயிர் உறத்தழுவினர் பிரிந்த - முன்பு உயிர் பொருந்தத்
தழுவியவராய்ப் பிரிந்து இருக்கின்ற; கந்த ஓதியர் - மணம் வீசும் கூந்தலை
உடைய மகளிர்; சிந்தையின் - மனம்போலக்;கொதிப்பது - கொதிக்கும்
தன்மை வாய்ந்தது; (இப்போது) அக் கழலோர் வந்த போது- அந்த வீரக்
கழலை அணிந்த (பிரிந்து சென்ற) காதலர் மீண்டு வந்த போது;  அவர்
மனம் எனக் குளிர்ந்தது -
அந்த மகளிர் மனம் போலக் குளிர்ச்சி
அடைந்தது.

     பாலையின் வெம்மைக்குப் பரிந்த மகளிரின் உள்ளக் கொதிப்பையும்,
குளிர்ச்சிக்குச் கூடிய மகளிரின் உள்ளத் தண்மையையும் உவமைப்படுத்தினார்.
வெப்பக் கொடுமையால் முல்லைதிரிந்து  பாலையாகும் என்ற புலனெறி,
இங்கே பாலை திரிந்து முல்லையானதாக வடிவுகொண்டது.            46

மூவரும் சித்திரகூட மலையைக் காணுதல்  

2045.வெளிறு நீங்கிய பாலையை
     மெல்லெனப் போனார்,
குளிரும் வான் மதிக் குழவி, தன்
     சூல் வயிற்று ஒளிப்ப,
பிளிறு மேகத்தைப் பிடி எனப்
     பெரும் பளைத் தடக் கை
களிறு நீட்டும் அச் சித்திர
     கூடத்தைக் கண்டார்.