பக்கம் எண் :

466அயோத்தியா காண்டம்

அமுதனாளுக்கும் - அமுதத்தை ஒத்த சீதைக்கும்; கைகளும் கண்களும்
கமலம்போன்ற -
கைகளும், கண்களும் மாலைக் காலத்துத் தாமரைகள்
குவிந்திருப்பது  போல்குவிந்து  மூடிக்கொண்டன.

     மாலையிற் சில மலர் குவிதலும், வேறுசில மலர்தலும் இயல்பு -
வழிபாடு செய்வார் கண்களைமூடிக் கைகளைக் குவிப்பர் ஆதலின், இங்கு
மாலைக்காலத்துத் தாமரை குவிந்திரப்பது  போலக்கைகளும், கண்களும்
ஆயின என்று குறிப்பால் அதனைப் புலப்படுத்தினர்.  ஏகாரம் ஈற்றசை.  42

இலக்குவன் அமைந்த குடிலில் இராமன் சீதையோடு குடிபுகுதல்  

2088.மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும்,
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான்.

     தவத்தின் எய்தினான் - தவம் காரணமாகக் காடு நோக்கி வந்த
இராமன்; மாலைவந்து அகன்றபின் - மாலைப் பொழுது வந்து சென்ற
பிறகு (இரவில்);  வேலை உறைவிடம்வந்து மேயது ஆம் என -
கடலானது  தான் தங்கும் இடத்தை வந்து சேர்ந்தது என்று
சொல்லும்படியாக; மருங்கிலாளொடும் - இடையில்லாத சீதையோடும்;
கோலை  வந்து உமிழ் சிலைத் தம்பி - அம்பை உமிழுகின்ற வில்லை
உடைய தம்பியாகிய இலக்குவன்; கோலிய - செய்தமைத்த;  சாலை வந்து
எய்தினான் -
சாலை இருக்கும் இடத்தைவந்தடைந்தான்.

     நீலக்கடல் போன்ற நிறம் உடையவன் இராமன் ஆதலின், கடல் தன்
உறைவிடம் போனதுபோல என்று உவமைப்படுத்தினார்.              43

இலக்குவன் அமைத்த சாலை  

2089.நெடுங் கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல்நெடு முகடு ஒழுக்கி, ஊழுற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே.

     நெடுங் கழைக் குறுந்துணி நிறுவி மேல் நிரைத்து - நீண்ட
மூங்கில்களின் சிறியதுண்டுகளை நிறுத்தி மேலே வரிசையாக அமைத்து;
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி-வளைதல் இல்லாத நீண்ட தூலத்தை
நேராக நிறுத்தி;  ஊழ் உற இடுங்கல் இல் கை ஏற்றிவிசித்து -
முறையாகப் பொருந்தக் கீழே தாழ்தல் இல்லாத பக்கக் கழிகளை மேல் ஏற்றி
நன்கு இறுக்கிக் கட்டி;  முடங்கல் இல் வரிச்சுமேல் - வளைதல் இல்லாத
அந்தக் கட்டியவரிச்சுக்களின் மேலே; எங்கணும் - எவ்விடத்தும்; விரிச்சு
மூட்டி
-விரித்து மூடு செய்து.