அளவிற்கு மேற்பட்ட செல்வங்களை; கொடுத்தனன்- (பரதன்) பரிசாக அளித்தான். நல்ல செய்தியைத் தாங்கிய தோற்றம் காட்டுதற்குச் சந்தனம் பூசப்பெற்றது. பனைஓலையைச் சுருட்டி முத்திரை இட்டு அனுப்புதல் வழக்கம். சுருட்டுதலின் ‘முடங்கல்’ என்றுதிருமுகத்துக்கு ஒரு பெயர், வாசிப்பார் முதலில் சுருளைப் பிரித்து நீட்ட வேண்டுதலின்‘நிமிர்த்தனன்’ என்றார். இடப்பெற்றது ‘ஈடு’. ஓலையில் இடப்பெற்ற செய்தி என்பது பொருள். கோசல நாட்டில் நிகழ்ந்த அவலச்செய்தி எதுவும் இல்லாத திருமுகவே அனுப்பப்பட்டது.முடிசூட்டு விழாவாகிய நற்செய்தியும் அதில் இல்லை. வசிட்டரின் ராஜதந்திரம் எவ்வாறு சொல்அமைத்தது என்ற குறிப்பினைக் கவிஞர் தரவில்லை. துயர் ஊட்டாமல் பரதனை வரவழைக்கவேண்டும் என்பதொன்றே மன்னன் சார்பில் செயல்பட்ட முனிவரின் நோக்கம். 6 பரதன் சத்துருக்கனனோடு அயோத்திக்குச் செல்லுதல் 2108. | வாள் நிலா நகை தோன்ற, மயிர் புறம் பூண, வான் உயர் காதலின் பொங்கினான், தாள் நிலாம் மலர் தூவினன் - தம்முனைக் காணலாம் எனும் ஆசை கடாவவே. |
தம் முனைக் காணலாம் எனும் ஆசை- (பரதன்) தன் முன்னவனாகிய இராமனைக் காணப்போகிறோம் என்னும் ஆர்வம்; கடாவ- (மேன்மேலும் மிகுந்து) உள்ளத்தைத் தூண்டுதலினால்; வாள்நிலா நகை தோன்ற- ஒளி நிலாப்போன்ற மகிழ்ச்சிச் சிரிப்புத் தோன்றவும்; புறம் மயிர்பூண- உடம்பின் வெளிப்பகுதியெல்லாம் மயிர்க்கூச் செறிந்து அழகுறத் தோன்றவும்; வான் உயர் காதலின்- மிக உயர்ந்த அன்பினால்; பொங்கினான்- நிரம்பி வழியப்பெற்றவனாய்;தாள்- (மனத்தால்) இராமபிரான் திருவடிகளில்; நிலாம் மலர்- பொருந்திய மலர்களை; தூவினன்- பாவனையால் தூவி வழிபட்டான். மகிழ்ச்சி மிகப் பெற்றவர்க்குச் சிரிப்புத் தோன்றல் மயிர்க்கூச் செறிதல் இயல்பு.“ஒன்றன் மதுரச் சுவைக்கு அதிசயங் கூறுவார் ‘மயிரினைச் செவ்வன் நின்றன’ என்பது போலக்கொள்க.” (தொல். பொருள். மெய்ப். பேரா. உரை 14) என்பதும் காண்க. தம் முன்னைக் காணும் பெருவிருப்புத் தலைதூக்குதலின் இராமன் திருவடிகளைப் பாவனையால்கண்டு மலர் தூவித் தொழுதான் என்க. இராமபிரான் மாட்டுப் பரதனுக்குள்ள பெருங் காதலும், பக்தியும் இங்கே சொல்லப்பெறுவது கதையின் பின்னோட்டத்தில் பரதன் உளப்பாங்கைப் பெரிதும் சித்திரிக்கப்பயன்படும். நிலாம்மலர் - விளக்கம் சிறந்த மலர் எனப் பொருள்கூறுலும் ஒன்று. முடங்கலின்மீது மலர் தூவினான எனல் ஏற்புடைத்தாயின் கொள்க. ‘ஏ’ ஈற்றசை. 7 |