பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 479

சங்குகள் ஒலித்தன; பேரி மீன வேலையின் விம்மின -  பெருமுரசுகள்
மீனுடைய கடல் ஒலிபோல முழங்கின.

     சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆதலின் எங்குச் செல்லினும்
சேனையோடு செல்லுதல்அவர்க்கு இயல்பு ஆதலின் படை எழுச்சியும்
கூறற்பாலதாம். சுற்றின, ஈண்டின, சூழ்ந்தனஎனவும், முரன்றன, விம்மின
எனவும்  சொற்களை மாற்றியமைத்த அழகு இன்பம் பயப்பது.           9

2111.கொடி நெருங்கின; தொங்கல் குழீஇயின;
வடி நெடுங் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின; பூண் ஒளி பேர்ந்தன,
இடி துவன்றின மின் என, எங்குமே.

     (அச்சேனை எழுச்சி எங்கும்) கொடி நெருங்கின - கொடிகள்
நெருங்கி வந்தன; தொங்கல்குழீஇயின- பீலிக்குஞ்சம் எனப்படும்
தொங்கல் திரண்டு வந்தன;வடி நெடுங்கண் மடந்தையர்-மாவடுப்
போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர்; ஊர் மடப்பிடி- ஏறிச்
செலுத்துகின்ற இளையபெண் யானைகள்; துவன்றின- நெருங்கிச் சென்றன;
பூண் ஒளி- (அம்மகளிர் அணிந்த)கலன்களின் ஒளி; இடி துவன்றின மின்
என
- இடியொடு நெருங்கிய மின்னலைப்போல; எங்கும்பேர்ந்தன-
எல்லா இடங்களிலும் விட்டு விளங்கின.

     இம் மகளிர் அரச மகளிர்; போர்க்குச் செல்லாத சேனைகள் ஆதலின்,
வடி - மாவடு; கூர்மை எனப் பொருள்கூறலும் ஒன்று.  அணிகள் ஒளியும்,
ஒலியும் விட்டு விட்டு நிகழ்தலின் ‘இடிதுவன்றின மின’ என உவமை கூறப்
பெற்றது எனலாம். தொங்கல் - பிச்சம் எனப்பெறும், ‘ஏ’ஈற்றசை.       10

2112.பண்டி எங்கும் பரந்தன; பல் இயம்
கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில்
வண்டு இயம்பின; வாளியின் வாவுறும்,
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே.

     பண்டி- வண்டிகள்; எங்கும் பரந்தன- எல்லாவிடங்களிலும் பரவிச்
சென்றன; பல்இயம்- பலவகையான வாத்தியங்கள்; கொண்டலின்
கொண்டு இயம்பின
- மேக முழக்கத்தைப்போல ஒலிகொன்டு ஒலித்தன;
கோதையில்- மைந்தரும் மகளிரும் சூடிய மாலையில்; வண்டு இயம்பின-
வண்டுகள் ஒலித்தன;  செண்டு இயங்கு- வையாளி வீதியில் உலாவுகின்;
வாளியின் வாவுறும் பரியும்- அம்பைப்போல விரைந்து செல்கின்ற
குதிரையும்; செறிந்த - நெருங்கிச் சென்றன.

     சேனைகள் செல்லுதலின் உணவு முதலிய உடன் கொண்டு செல்லும்
வண்டிகள் எங்கும்பரந்தனவாம்.  செண்டு வட்ட வடிவமாக அமைத்த
மைதானம்.  இதனைச் செண்டு வெளி என்பது  அக்காலவழக்கு.        11