வானுலகு வரை சென்று பரவியது; தண்ணுமைதான்- மத்தள வொலிதான்; ஊன் அளைந்த உடற்கு- ஊனொடு கலந்த உடலுக்கு; உயிர் ஆம் என- பொருந்திய உயிர் போல (உடல் முழுவதும் உயிர் பரவியிருப்பது போல); அளைந்து- அப்பாடல் ஒலியோடு இரண்டறக் கலந்து; தழுவின- இணைந்து நின்றன. மாகதர் - இருந்து ஏத்துவார். அரசரை ஏத்திப்பாடும் இயல்பு உடையாடர் மூவர். சூதர், மாகதர், வேதாளிகர் என்பார். இவரை முறையே நின்றேத்துவார், இருந்து ஏத்துவார், கிடந்து ஏத்துவார் என்பது வழக்கம். அவருள் இவர் மாகதர் ஆதலின் இருந்து ஏத்துவார். தண்ணுமை ஒலியும், பாடல் ஒலியும் ஒன்றையொன்று இணைதலுக்கு உடல் - உயிர் இணைப்பை உவமையாகினார் - தண்ணுமை என்பது இங்கு அதன் ஒலியைக் குறித்து நின்றது. ‘ஏ’ ஈற்றசை. 16 2118. | ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை வீறு கொண்டன, வேதியர் வாழ்த்து ஒலி; ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை மாறு கொண்டன, வந்திகர் வாழ்த்து அரோ! | ஊறு கொண்ட- (குறுந்தடியால்) அடிக்கப்படுகின்ற; முரசு உமிழ் ஓதையை- முரசம் வெளிவிடும் பேரொலியை; வேதியர்- வேதம் வல்ல அந்தணர் (கூறும்); வாழ்த்து ஒலி- வாழ்த்தும் ஒலியானது; வீறு கொண்டன- (கீழ்ப்படுத்தி) மேம்பட்டு ஒலித்தன; வந்நிகர் வாழ்த்து- (அரசனைத்) துதிக்கும் பாடல் ஒலி; ஏறு கொண்டு எழு மல்லர்- ஏற்றின் தன்மை படைத்து (வீரத்தோடு) எழுகின்ற வீர மற்றவர்களின்; இடிப்பினை- வீர முழக்கத்தை; மாறு கொண்டன- பகைத்தனவாய்ப் பேரொலியாயின. மென்மையான வேதியர் வாழ்த்தும், வந்நிகர் வாழ்த்தும் வன்மையான முரசொலியையும், மல்லர் முழக்கத்தையும் கீழ்ப்படுத்தின என்பதால் அவற்றின் மிகுதி கூறியவாறு. ‘அரோ’ அசை. 17 பரதனும் படைகளும் கோசல நாடு அடைதல் 2119. | ஆறும் கானும் அகல் மலையும் கடந்து ஏறி, ஏழ் பகல் நீந்தி, பின், எந்திரத்து ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை நாறு பாய் வயல் கோசலம் நண்ணினாள். | (பரதன்) ஏழ் பகல்- ஏழு நாள்கள்; நீந்தி- வழி நடந்து சென்று; ஆறும் கானம் அகல் மலையும் ஏறிக் கடந்து- ஆறும், காடும், அகன்ற மலையும் ஏறித் தாண்டிச் சென்று; பின்- பிறகு; |